Published : 01 Aug 2020 01:24 PM
Last Updated : 01 Aug 2020 01:24 PM

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள 25% இடங்கள் எவ்வாறு நிரப்பப்படும்?- அறிவிப்பு வெளியிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் 25% ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

6 முதல் 14 வரையிலான வயதுடையவர்களுக்கு இலவச கட்டாயக் கல்வி கிடைப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் உள்ள மாணவர் சேர்க்கைக்கான இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் 25 சதவிகிதம் ஒதுக்கப்படுகிறது. அதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி மே 29-ம் தேதியுடன் முடிவடைகிறது.

ஆனால், இந்த ஆண்டு கரோனா தாக்கத்தால் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கியுள்ளதால் அந்த நடைமுறை கேள்விக்குறியாகி உள்ள நிலையில், இது தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிடக் கோரி பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் அதன் மாநிலச் செயலாளர் ஜெ.முகம்மது ரசின் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “கரோனா தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்தே பள்ளிகள் மூடப்பட்டு, எப்போது திறக்கப்படும் என முடிவெடுக்கப்படாத நிலை உருவாகியுள்ளது. இந்த ஆண்டு இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள இடங்கள் எவ்வாறு நிரப்பப்படும் என தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்போ அல்லது தெளிவுபடுத்துதலையோ வழங்கவில்லை.

தனியார் பள்ளிகள் ஆன்லை மூலம் வகுப்புகளைத் தொடங்கியுள்ளதும், கல்விக் கட்டணத்தில் 40 சதவிகிதத்தை வசூலிக்கலாம் என்று ஜூலை 17-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இடம் கிடைக்கும் என நம்பியுள்ள பெற்றோரைச் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனவே, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவிகித இலவச மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்புவதற்கான நடைமுறைகளையும், கால அட்டவணையையும் தமிழக அரசு வெளியிட உத்தரவிட வேண்டும். அவற்றைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விளம்பரபடுத்த வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், நுழைவு நிலை வகுப்புகளான எல்.கே.ஜி. மற்றும் ஒன்றாம் வகுப்பு இடங்களில் 25 சதவிகித இடங்களை ஒதுக்கிவைக்கும்படி உத்தரவிட வேண்டும் என முகம்மது ரசின் இடைக்கால கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x