Last Updated : 18 Jun, 2020 12:05 PM

 

Published : 18 Jun 2020 12:05 PM
Last Updated : 18 Jun 2020 12:05 PM

புதுச்சேரியில் ஜூலை மாதத்தில் கரோனா பாதிப்பு ஆயிரக்கணக்காகும்: கிரண்பேடி எச்சரிக்கை

புதுச்சேரியில் ஜூலை மாதத்தில் கரோனா பாதிப்பு ஆயிரக்கணக்காகும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார்.

புதுச்சேரியில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 149 பேர் சிகிச்சையில் உள்ளனர். 116 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர். ஆறு பேர் இறந்துள்ளனர்.

இச்சூழலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (ஜூன்18) வெளியிட்ட வாட்ஸ் அப் வீடியோ தகவல்:

"தனிமனித இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினி பயன்படுத்துதல் அவசியம். சிலரின் பொறுப்பற்ற நடவடிக்கையால் பாதிப்பு அதிகமாகிறது. இந்நிலை தொடர்ந்தால் ஜூலை மாதத்தில் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்காகும். யாருக்கு வேண்டுமாலும் தொற்று ஏற்பட்டு பாதிப்பு உருவாக வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கிய சேது செயலியைத் தரவிறக்கம் செய்யுங்கள்.

முதலில் உங்களைக் காப்பாற்றிக்கொள்வது அவசியம். புதுச்சேரி அரசு விதிக்கும் விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுங்கள். அதை மீறி எவ்வாய்ப்பையும் நீங்களாக எடுக்காதீர்கள். கூட்டாக எதிர்கொள்ளும் கடும் அபாயங்களை உணர்வது நமது கடமை.

தமிழகத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும்போது புதுச்சேரியில் மேலும் இது அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அதிகபட்ச முன் தற்காபப்பு முயற்சி அவசியம். அரசு தற்போது அதிக அளவில் நடவடிக்கை எடுப்பதுபோல் தனிப்பட்ட நபர்களும் அதிக அளவில் முன்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புதுச்சேரி மக்கள் இதனை எச்சரிக்கையாகக் கருத்தில் கொள்ள வேண்டும்".

இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x