Published : 18 Jun 2020 11:43 AM
Last Updated : 18 Jun 2020 11:43 AM

சென்னையில் ஒரு மாதத்தில் 5 மடங்கு அதிகரித்த கரோனா தாக்கம்; அறியாமை அல்ல, அலட்சியமே காரணம்; ராமதாஸ்

முழு ஊரடங்கை முழுமையாக மதித்து கரோனாவை வெல்வோம் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 18) வெளியிட்ட அறிக்கை:

"சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இன்று நள்ளிரவு முதல் இம்மாத இறுதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதை வெறுப்பாக கருதாமல் வாய்ப்பாக நினைத்து அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சென்னையில் நேற்று நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 556 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த மே மாதம் இதே நாளில் 7,117 ஆக இருந்த பாதிப்புகளின் எண்ணிக்கை, ஒரு மாதத்தில் 5 மடங்காக அதிகரித்திருக்கிறது என்பதிலிருந்தே சென்னையில் கரோனா வைரஸ் நோய் எந்த அளவுக்கு வேகமாக பரவி வருகிறது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். கரோனா வைரஸ் நோய்ப் பரவலுக்கு நாம் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க மறந்ததுதான் முக்கியக் காரணம்.

அதன் விளைவாகத்தான் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்த நிலையில், இப்போது அனைத்து தளர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த ஊரடங்கு மிகவும் கடுமையாக இருக்கும் என்றும், விதிகளை மீறி தேவையின்றி சாலைகளில் நடமாடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், சென்னை காவல்துறை ஆணையாளர் விஸ்வநாதன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவை மதிக்கப்பட வேண்டும்.

கரோனா வைரஸ் நோய்ப்பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு, மாநில அரசுகள் கூறிய அறிவுரைகளை மதிக்கத் தவறினோம். தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்; தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; வெளியில் சென்று திரும்பும் போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்ட அறிவுரைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டோம். அதன் விளைவு... எப்போது கரோனா நம்மைத் தாக்குமோ? என்ற அச்சத்தில் உறைந்து கிடக்கிறோம். அனைத்துக்கும் காரணம், நமது அறியாமை அல்ல... அலட்சியம்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.

சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் இன்றிரவு முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், அதையாவது நாம் மதித்து நடக்க வேண்டும். அதன் மூலம் தான் கரோனா வைரஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு மருத்துவம் அளிக்க முடியும்.

எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த மக்களை நான் மீண்டும், மீண்டும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், முழு ஊரடங்கு காலத்தில் வீடுகளை விட்டு வெளியில் வரும் எண்ணத்தையே கைவிடுங்கள். தவிர்க்க முடியாமல் வீடுகளை விட்டு வெளியில் வந்தால், முகக்கவசம் அணிதல், கையுறை அணிதல் உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலம் சென்னையை கரோனா இல்லாத நகரமாக்க உதவ வேண்டும்.

உங்களது குடும்பத்தில் எவருக்கேனும் கரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைபேசியில் தொடர்பு கொண்டு சோதனை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் ஒருவருக்கு உள்ள நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும்.

அதேபோல், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, சோதனைகளை அதிகரிக்க வேண்டும். 12 நாட்கள் முழு அடைப்பு முடிவதற்குள் கரோனா பாதிப்பு உள்ளவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு, மருத்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மொத்தத்தில் இந்த முழு ஊரடங்கு முடியும்போது கரோனா இல்லாத சென்னை மலர வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x