Last Updated : 13 Jun, 2020 06:51 PM

 

Published : 13 Jun 2020 06:51 PM
Last Updated : 13 Jun 2020 06:51 PM

புதுச்சேரியில் வேரோடு பிடுங்கியெறியப்பட்ட  ஆலமரம்; மீண்டும் நட்டு உயிர்ப்பிக்க சமூக ஆர்வலர்கள் முயற்சி

வேருடன் பிடுங்கியெறியப்பட்ட ஆலமரத்தை அரசுக் கல்லூரி வளாகத்தில் நட்டு கற்பூரம் ஏந்திக் கும்பிட்ட சமூக ஆர்வலர்கள்.  

புதுச்சேரி

வேரோடு பிடுங்கியெறியப்பட்ட பழமையான ஆலமரத்தைக் கைப்பற்றி, மீண்டும் நட்டு உயிர்ப்பிக்கும் முயற்சியில் புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இறங்கியுள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையம் ஆற்றங்கரையோரத்தில் விவசாயி ஒருவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இங்கு பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த நிலத்தில் நீண்ட நாட்களாகப் பயிரிடப்படவில்லை.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நில உரிமையாளரான விவசாயி திடீரென அந்த ஆலமரத்தை வேருடன் பிடுங்கி ஓரமாக வைத்துவிட்டார். இதுகுறித்துத் தகவல் அறிந்த புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வளர்கள் பிடுங்கியெறியப்பட்ட அந்த ஆலமரத்தைக் கைப்பற்றி, கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரம் கொண்டு மீண்டும் வேறு இடத்தில் நட்டு உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அவர்களுடைய இந்தச் செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஆலமரத்தை உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தனசுந்தராம்பாள் சமூக அமைப்பின் தலைவர் ஆனந்தன் கூறும்போது, "பிடுங்கியெறியப்பட்ட ஆலமரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானதாகும். பல நாட்களாக பயிரிடப்படாத நிலையில் விவசாயி அந்த ஆலமரத்தை வேருடன் பிடுங்கியெறிந்துவிட்டார்.

அதுபற்றி எங்களுக்கு 2 நாட்களுக்குப் பின்னர் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த ஆலமரத்தை உயிர்ப்பிக்க முடிவு செய்தோம். அதற்காக ஓய்வுபெற்ற தாவரவியல் பேராசிரியர் கிருஷ்ணன் வழிகாட்டுதலின் பேரில், தானம்பாளையம் ராஜீவ் காந்தி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் முன்னிலையில் நேற்று (ஜூன் 12) நட்டோம்.

சுமார் 15 டன் எடை கொண்ட அந்த மரத்தை கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு நட்டுப் பராமரிக்கிறோம். எங்களுடன் உயிர்த்துளி அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் பலர் உதவி புரிந்தனர். இந்த மரத்தை எப்படியாவது மீண்டும் வளர்த்துவிட வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x