Published : 13 Jun 2020 06:28 PM
Last Updated : 13 Jun 2020 06:28 PM

85 நாட்களுக்கு பின் கடலுக்குச் சென்ற ராமேசுவரம், மண்டபம் விசைப்படகு மீனவர்கள்

படங்கள்: எல். பாலச்சந்தர்  

ராமேசுவரம்

ராமேசுவரம் மற்றும் மண்டபத்திலிருந்து 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 8,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 85 நாட்களுக்குப் பின்னர் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலமாக கருத்தப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அரசு தடை விதித்துள்ளது.

இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழகத்தில் விசைப்படகு மீனவர்கள் கடந்த மார்ச் 20-லிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதனால் தொடர்ச்சியாக 3 மாதங்கள் மீனவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்பதால் அவர்களின் வாழ்வாதாரத்தைg கருத்தில் கொண்டு தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக் காலத்தை ஏப்ரல் 15 முதல் மே 31 வரையிலான 47 நாட்களாக குறைந்து ஜூன் 01 ஆம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.

வங்கக்கடலில் ஜூன்.1ம் தேதி முதல் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடி மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மன்னார் வளைகுடா பகுதியில் ஜூன்.6 ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

தொடர்ந்து ஜூன்.13ம் தேதி முதல் ராமேசுவரம், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடிக்கச் செல்வதற்காக தங்களது விசைப்படகுகளை மராமத்து செய்யும் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளில் 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் 85 நாட்களுக்கு பின் சனிக்கிழமை காலை பாக் ஜலசந்தி கடற்பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

விசைப்படகுகளில் மீன்பிடி உபகரணங்கள், டீசல் கேன்கள், ஐஸ்கட்டிகள் ஏற்றி விசைப்படகுகள் பாக் ஜலசந்தி கடலை நோக்கிச் சென்றன. சுமார் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு ராமேசுவரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x