Published : 10 May 2020 06:57 PM
Last Updated : 10 May 2020 06:57 PM
இன்று புதிதாக 669 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று வரை 6,535 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று (மே 10) தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டது. அதன்படி, இன்று புதிதாக 669 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 509 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனால், சென்னையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,839 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னை தவிர அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் 47 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 43 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 8-ம் தேதி உயிரிழந்த செங்கல்பட்டை சேர்ந்த 74 வயது நபருக்கு கரோனா இருந்தது இன்று உறுதி செய்யப்பட்டது. அதேபோன்று, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கரோனாவுக்காக அனுமதிக்கப்பட்ட 59 வயது சென்னையை சேர்ந்த நபர் இன்று உயிரிழந்தார். அவருக்கு ஏற்கெனவே நீரிழிவு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன.
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நீரிழிவு, சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது நபருக்கு கரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இந்த 3 உயிரிழப்புகளால், தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக இதுவரை 1,959 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5,195 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 லட்சத்து 43 ஆயிரத்து 37 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 2 லட்சத்து 32 ஆயிரத்து 368 தனிநபர்களுக்கு இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பாக 37 மற்றும் தனியார் சார்பாக 16 என 53 கரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன. 4,305 பேர் கரோனா சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT