Last Updated : 07 May, 2020 02:19 PM

 

Published : 07 May 2020 02:19 PM
Last Updated : 07 May 2020 02:19 PM

புதுச்சேரியில் இலவசமாக முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் போக்குவரத்து போலீஸார்

கிராமப்புற சிறுவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கும் வில்லியனூர் போக்குவரத்து போலீஸார். 

புதுச்சேரி

புதுச்சேரி அருகே கிராமப் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி போக்குவரத்து போலீஸார் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

புதுச்சேரியில் கரோனா பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோரிடம் காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ரூ.100 அபராதம் வசூலித்து வருகின்றனர்.

குறிப்பாக நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்டோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பலர் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுகின்றனர்.

இந்நிலையில் வில்லியனூர் போக்குவரத்து போலீஸார் தங்களின் சொந்த செலவில் முகக்கவசத்தை வாங்கி வில்லியனூர் கிராமப்பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் சிறுவர்கள், பெண்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இன்று (மே 7) வில்லியனூர் போக்குவரத்து ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் உதவி ஆய்வாளர் புனிதராஜா ஆகியோர் 250க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி, கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து இலவசமாக முகக்கவசம் வழங்கும் பணியையும் மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து வில்லியனூர் போக்குவரத்து ஆய்வாளர் ஆறுமுகம் கூறும்போது, "கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிலர் ஒரே முகக்கவசத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும்போது கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்னும் சிலர் முகக்கவசம் வாங்கக்கூட முடியாமல் இருக்கின்றனர். ஆகவே அவர்களுக்கு முகக்கவசம் வழங்க முடிவு செய்து, சொந்த செலவில் 500க்கும் மேற்பட்ட முகக்கவசங்களை வாங்கி இலவசமாக வழங்கி வருகிறோம். குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு இந்த முகக்கவசத்தை வழங்குகிறோம். யாரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படக்கூடாது என்பதே எங்களுடைய எண்ணம். இதனைத் தொடர்ந்து மேற்கொள்வோம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x