Last Updated : 03 May, 2020 07:11 PM

 

Published : 03 May 2020 07:11 PM
Last Updated : 03 May 2020 07:11 PM

கோயம்பேடு சென்று சேலம் வந்தவர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எவரேனும், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று வந்திருந்தால், அது குறித்து அவர்கள் தாமாக முன்வந்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று வந்தவர்கள், கோயம்பேடு காய்கறி சந்தையில் பணிபுரிந்து திரும்பியவர்கள் எவரேனும் இருப்பின், அவர்கள் தாமாக முன்வந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள்/அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்/ சேலம் மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகள் உள்ளிட்டவற்றிற்கு நேரில் வருகை தந்து, தங்களது விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

மேலும், இதுகுறித்த விவரங்களை சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட்-19 கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களான 0427-2450498, 2450022, 2450023, 73058 68942 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று வந்தவர்கள் இது குறித்து தகவல் தெரிவிக்காமல் மறைத்தது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது காவல் துறை மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இ-பாஸ்

சேலம் மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு, அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாகன அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய அவசர தேவைகளுக்காக, வாகன அனுமதி சீட்டு தேவைப்படும் நபர்கள் தமிழ்நாடு அரசின் tnepass.tnega.org என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும். இ-பாஸ் வேண்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பினால் nonresidenttamil.org என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து, வெளி மாநிலங்களுக்கு செல்ல மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருகை தர இணைய வழி அனுமதி வழங்குவதற்கு தொழிற்துறை, காவல்துறை, வருவாய்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மூலம் மேற்குறிப்பிட்டுள்ள இணைய வழி அனுமதி வழங்கப்படும்.

தொழிற்சாலை அனுமதி

மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு, சேலம் மாவட்டத்திற்கு ஏற்ற வகையில் நோய் தடுப்பு பகுதிகளை தவிர, மற்ற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்குவதற்கு tnepass.tnega.org என்ற இணையதளம் வாயிலாக அனுமதி வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதி சீட்டானது பொது மேலாளர், சேலம் மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கப்படும். அனுமதி சீட்டு பெற்றபின்னரே தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x