Last Updated : 16 Apr, 2020 11:42 AM

 

Published : 16 Apr 2020 11:42 AM
Last Updated : 16 Apr 2020 11:42 AM

சென்னை உயர் நீதிமன்றத்தை போல் மதுரை கிளையிலும் அவசர வழக்குகளை விசாரிக்க வேண்டும்: 14 மாவட்ட வழக்கறிஞர்கள் கோரிக்கை

சென்னை உயர் நீதிமன்றத்தைப் போல் உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் அவசரமாக தாக்கல் செய்யப்படும் பொதுநல மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மார்ச் 25 முதல் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் பணிகள் நிறுத்தப்பட்டன.

நீதிமன்ற வளாகங்களில் ஆட்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நேரிலும், வீடியோ கான்பரன்ஸ் வசதியை பயன்படுத்தியும் நீதிபதிகள் விசாரித்து உத்தரவுகள் பிறப்பிக்கின்றனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 21 நாள் ஊரடங்கு காலத்தில் அவசர வழக்குகள் எதுவும் விசாரிக்கப்படவில்லை.

அனைத்து ரேசன்கார்டுகளுக்கும் கரோனா நிவாரண நிதியாக ரூ.ஆயிரம் வழங்க வேண்டும், ஊரடங்கால் வேலையிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கடன் தவணையை பிடித்தம் செய்ய வங்கிகளுக்கு தடை விதிக்க வேண்டும், மதுரையின் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவை நடத்த உத்தரவிட வேண்டும், நெருங்கிய உறவினர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களில் இறுதி சடங்கில் பங்கேற்க சிறை கைதிகளை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.

நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் வசதியில் ஜாமீன், முன்ஜாமீன் தொடர்பான அவசர மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பித்தார். இன்று நீதிபதி தண்டபானி ரிட் மனுவை வீடியோ கான்பரன்ஸில் விசாரித்தார். இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தை போல் உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் அவசர பொதுநல மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கறிஞர்கள் கூறுகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரமாக தாக்கல் செய்யப்படும் பொதுநல மனுக்கள் அதன் முக்கியத்துவம் கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றி நேரிலும், வீடியோ கான்பரன்ஸ் வசதியிலும் அவசர மனுக்களை நீதிபதிகள் விசாரிக்கின்றனர்.

இதேபோல் மதுரை உள்பட 14 மாவட்டங்களில் இருந்து அவசரமாக தாக்கல் செய்யப்படும் பொதுநல மனுக்களை அதன் முக்கியத்துவம் கருதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x