Published : 16 Apr 2020 10:25 AM
Last Updated : 16 Apr 2020 10:25 AM

கரோனாவுக்கு நிதி திரட்டுவதாக கூறி  மோசடி: ஈரோட்டில் மூன்று பேர் கைது; 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு

பிரதிநிதித்துவப் படம்

 ஈரோடு

கரோனாவுக்கு நிதி திரட்டுவதாக கூறி மோசடி செய்ததாக, ஈரோட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு சென்னிமலை ரோடு, காந்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31). இவர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போனுக்கு பேசிய ஒரு நபர் தான் ஓய்வு பெற்ற நீதிபதி என்றும், தற்போது கரோனா வைரஸ் பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டி வருவதாகவும், உங்கள் மருத்துவமனை நிர்வாக இயக்குநரிடம் கூறி நிதியுதவி வழங்குங்கள் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து சதீஷ்குமார் மருத்துவமனை நிர்வாக இயக்குநரிடம் கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகியோர் நிதி உதவி அளிக்க முடிவு செய்து ஒரு லட்சம் பணம் கொடுக்க முடிவு செய்தனர். இந்நிலையில், சதீஷ்குமாருக்கு அந்த நபர் மீண்டும் போனில் தொடர்பு கொண்டு பணத்தைப் பெற்றுக்கொள்ள வெங்கடபதி என்பவர் வருவார் என்றும் அவரிடம் பணத்தைக் கொடுங்கள் என்றும் கூறியுள்ளார்.

அதன் பேரில் சம்பவத்தன்று மருத்துவமனைக்கு 3 நபர்கள் வந்து சதீஷ்குமாரிடம் தாங்கள் ஓய்வுபெற்ற நீதிபதி கூறி வந்ததாகவும் தங்கள் பெயர், வெங்கடபதி ,கிருஷ்ணமூர்த்தி, கிரீஷ் குமார் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் சதீஷ்குமார் மருத்துவமனை ஊழியர்களிடம் இருந்து திரட்டிய ரூ.50 ஆயிரம் மற்றும் மருத்துவ நிர்வாக இயக்குநர் கொடுத்த ரூ.50 ஆயிரம் என ரூபாய் ஒரு லட்சம் பணத்தை அவர்களிடம் கொடுத்தார்.

அப்போது, அவர்களிடம் ஓய்வு பெற்ற நீதிபதி குறித்து சதீஷ்குமார் பேசினார். அதற்கு அந்த மூன்று பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் சொன்னதால் சந்தேகமடைந்த சதீஷ்குமார் அவர்களிடம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். இதையடுத்து, அந்த மூவரும் சதீஷ்குமாரிடம் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். சதீஷ்குமார் அங்கிருந்த ஊழியர்கள் உதவியுடன் மூன்று பேரையும் பிடித்தனர்.

இதுகுறித்து, வீரப்பன்சத்திரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மூவர் மீதும் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x