Published : 13 Apr 2020 07:08 AM
Last Updated : 13 Apr 2020 07:08 AM
தமிழகத்தில் அரசு மருத்துவர் களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஆண்டு அக்டோபரில் போராட்டங்களை நடத்தி வந்தனர். பின்னர் முதல்வர் பழனிசாமி, அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வேண்டுகோளை ஏற்று நவம்பர் 1-ல் பணிக்குத் திரும்பினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பெண் மருத்துவர்கள் உட்பட 118 பேரை கிராமப்புறங்கள், மலைப்பிரதேசங்கள் உட்பட பல்வேறுமாவட்டங்களுக்கு பணியிடமாற் றம் செய்து அரசு உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மன் தருமபுரியில் இருந்து ராமநாதபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். ஆனாலும், தொடர்ந்து பணியிடமாற்ற உத்தரவை அரசு திரும்பப் பெறவில்லை.
இந்நிலையில், தங்களுடைய உயிரைப் பற்றி கவலைப்படாமல் கரோனா வைரஸ் வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்களின் பணியிடமாற்ற உத்தரவு திரும்பப்பெற வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக அரசு டாக்டர்கள் கூறியதாவது: சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்வதாக முதல்வரும் அமைச்சரும் பெருமை பேசி வருகின்றனர். ஆனால், மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் அரசு டாக்டர்கள் குறைவான ஊதியம் பெறுகின்றனர். நியாயமான கோரிக்கைகளுக்காக போராடினால் அரசுபழிவாங்கும் போக்கை கடைபிடிக் கிறது.
இப்போது கூட எங்களுடைய உயிரைப் பற்றி கவலைப்படாமல் கரோனா வைரஸ் வார்டுகளில் பணியாற்றி வருகிறோம். சில டாக்டர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. குடும்பம், குழந்தைகளை தவிக்கவிட்டு பலநூறு கிமீ தொலைவில் பணியாற்றுகிறோம். இப்போதாவது பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்து, எங்களை மீண்டும் பழைய இடத்தில் பணியமர்த்த வேண்டும். இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT