Last Updated : 11 Apr, 2020 01:46 PM

 

Published : 11 Apr 2020 01:46 PM
Last Updated : 11 Apr 2020 01:46 PM

தஞ்சாவூர் மாவட்டத்தில் 59,268 பயனாளிகளுக்கு வீடு தேடிச் செல்லும் மாதாந்திர உதவித்தொகை

தஞ்சாவூர் மாவட்டத்தில் 59 ஆயிரத்து 268 பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை அவரவர் வீட்டுக்கே நேரடியாகச் சென்று வழங்கப்படுகிறது.

உலகளாவிய பெருந்தொற்று நோயாக பரவிக்கொண்டிருக்கும் கரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுத்திடும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆதரவற்ற கணவனை இழந்த பெண்களுக்கான உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை ஆகிய திட்டங்களின் மூலம் பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால், தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 59 ஆயிரத்து 268 பயனாளிகளில் 55 ஆயிரத்து 575 பயனாளிகளுக்கு வங்கிப் பணியாளர்கள் மூலமாகவும், 3,693 பயனாளிகளுக்கு அஞ்சல்துறை மூலமாகவும் மாதாந்திர உதவித்தொகையான ரூபாய் 1,000 பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 28 ஆயிரத்து 376 பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையினை நேரடியாக வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணியினை கண்காணித்திட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x