Published : 11 Apr 2020 12:53 PM
Last Updated : 11 Apr 2020 12:53 PM

ஈரோட்டில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு; பரிசோதனை முடிவு வராத நிலையில் சோகம்

பிரதிநிதித்துவப் படம்

ஈரோடு

ஈரோடு அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது ரத்தப் பரிசோதனை முடிவு வந்த பின்பே அவர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தாரா என்பது தெரியவரும்.

தமிழ்நாட்டில் இதுவரை 911 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 8 பேர் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் மாநில அளவில் 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த 60 வயதான முதியவர், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் பாதிப்பு காரணமாக ஏப்ரல் 8-ம் தேதியன்று ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரோனா சிறப்பு வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை (ஏப்.11) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது ரத்தப் பரிசோதனை முடிவு வந்த பின்பே, அவர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தாரா என்பது தெரிய வரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x