Published : 17 Feb 2020 12:50 PM
Last Updated : 17 Feb 2020 12:50 PM

பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம்: முழுக்க முழுக்க தமிழில் நடத்த வேண்டும்; இயக்குநர் கவுதமன் வலியுறுத்தல்

பழநி கோயில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வலியுறுத்துவது குறித்து ஆலோசனை நடத்திய திரைப்பட இயக்குநர் கவுதமன்.

பழநி

பழநி முருகன் கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே நடத்த வேண்டும் என, திரைப்பட இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியிலுள்ள தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு திரைப்பட இயக்குநரும், தமிழ் பேரரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான கவுதமன் இன்று (பொப்.17) வருகை தந்தார்.

சுவாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"தமிழகத்தின் பாரம்பரியக் கோயிலான பழநியிலுள்ள முருகன் கோயிலில் விரைவில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதன் தொடக்கமாக பாலாலயம் என்று சொல்லப்படும் இளங்கோயில் வழிபாடு நடைபெற்று கோயில் கட்டிடப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பழநி கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை முழுக்க முழுக்க தமிழிலேயே நடத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். தஞ்சைப் பெரிய கோயிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி செய்த பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பாரம்பரிய முறை என்பதைக் காரணம் காட்டி சமஸ்கிருத மொழியில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. பெயரளவில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டு ஏமாற்றப்பட்டது.

ஆனால், தமிழ்க் கடவுள் பழநியிலுள்ள முருகன் கோயிலில் பாரம்பரியத்தின் பெயரைச் சொல்லி எங்களை ஏமாற்ற முடியாது. பழநி கோயிலில் பண்டாரங்களே பாரம்பரிய பூஜை செய்து தமிழில் வழிபட்டு வந்தனர். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பண்டாரங்கள் வெளியேற்றப்பட்டு குறிப்பிட்ட சமூகத்தினர் இடைச்செருகல் செய்யப்பட்டு சமஸ்கிருத மொழியில் வழிபாடு நடத்தும் வழக்கம் உண்டானது.

எனவே, ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டு பழநி முருகன் கோயிலிலுக்கு நடத்தப்படும் குடமுழுக்கு விழாவை சிவாச்சாரியார்கள், ஓதுவார்களை வைத்து தேவாரம், திருவாசகம், திருமந்திரம் முழங்க, முழுவதுமாக தமிழில் மட்டுமே கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இதற்காக தமிழ் இறை வழிபாட்டு உரிமைக் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் மட்டுமே வழிபாடு நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் முதல் படியாக பழநி முருகன் கோயிலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இதன் முதற்கட்டமாக தமிழக முதல்வரைச் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.

தொடர்ந்து தமிழ் வழிபாட்டு முறையை வலியுறுத்தி மாநாடு நடத்தப்படும். அடுத்ததாக நீதிமன்றத்தை நாடவும் உள்ளோம்".

இவ்வாறு கவுதமன் தெரிவித்தார்.

தொடர்ந்து பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வலியுறுத்துவது குறித்து வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், சத்யபாமா அடிகளார், மோகனசுந்தரம் அடிகளார், இறைநெறி இமயவன் உள்ளிட்ட பலருடன் கவுதமன் ஆலோசனை நடத்தினார்.

தவறவிடாதீர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x