Published : 30 Dec 2019 06:42 AM
Last Updated : 30 Dec 2019 06:42 AM

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய 10 ஆயிரம் பேர் மீது வழக்கு

சென்னை

ஆலந்தூரில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேரணி நடத்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் 10 ஆயிரம் பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் திமுக, காங்கிரஸ் உட்பட பல அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. போலீஸாரின் அனுமதி இல்லாமலும், தடையை மீறியும் போராட்டம் நடத்தியதாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் உட்பட இதுவரை சுமார் 60 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று முன்தினம் சென்னை ஆலந்தூரில் பேரணி நடத்தப்பட்டது. ஆலந்தூரில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகை நோக்கி கண்டன பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, ஆலந்தூர் நீதிமன்றம் அருகே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்தப் பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தங்களது குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

தடையை மீறி பேரணியாக சென்றதாக கூறி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி, மாநில பொதுச்செயலாளர் முகமது, பொருளாளர் அப்துல் ரஹீம், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி எம்எல்ஏ உட்பட 10 ஆயிரம் பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் பரங்கிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x