Published : 30 Dec 2019 06:38 AM
Last Updated : 30 Dec 2019 06:38 AM

158 ஊராட்சி ஒன்றியங்களில் 46 ஆயிரம் பதவிகளுக்கு இன்று 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: 1.28 கோடி பேர் வாக்களிக்கின்றனர்; ஜன.2-ல் வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 46 ஆயிரம் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் மொத்தம் 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 91,975 பதவிகளுக்கு, 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் 3,643 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 48,891 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. மேலும்18,570 பதவிகளுக்கு போட்டியின்றிவேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியாக 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

முதல்கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 27-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. திருவள்ளூரில் வாக்குப்பெட்டிக்கு தீ வைப்பு,புதுக்கோட்டையில் வாக்குப்பெட்டியுடன் ஓட்டம் என ஒரு சில சம்பவங்களைத் தவிர மற்ற இடங்களில் தேர்தல் அமைதியாக நடந்தது. அந்தப் பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் 1 கோடியே 30 லட்சம்வாக்காளர்கள் இருந்த நிலையில், 76.19 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், எஞ்சியுள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இந்த ஒன்றியங்களில் 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,924 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 2,544 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 46,639 பதவிகள் உள்ளன. இதில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பதவிகள் போக, இதரபதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகளில், 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்குப்பதிவு அலுவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அலுவலர்களுக்கு நேற்று 3-ம் கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டு, பணி ஆணைகளும்வழங்கப்பட்டன. வாக்குப்பதிவுக்கு தேவையான ஆவணங்கள், பொருட்கள் கொண்ட தொகுப்புகளை வழங்கி, அவர்களுக்குஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் போலீஸார், முன்னாள் படைவீரர்கள், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 61 ஆயிரம் பேர்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான, பிரச்சினைகளுக்குரிய 1,551 வாக்குச்சாவடிகளில் வெப்கேமராக்களை பொருத்தி, வாக்குப்பதிவை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்த பின்னர், வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். 27 மாவட்டங்களில் 315 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் வரும் 2-ம் தேதி எண்ணப்படுகின்றன. அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் மேற்கொண்டு வருகின்றன.

தேர்தல் நடக்கும் பகுதிகளில்இயங்கும் அரசு, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு வாக்குப்பதிவு நாளன்று பொதுவிடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், வாக்குப்பதிவு நாளன்று, வாக்களிக்க தகுதியான தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு, வாக்களிக்க செல்வதற்காக ஊதியத்துடன் கூடியவிடுமுறையை அளிக்க வேண்டும். அந்த விடுமுறைக்காக அவர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய கூடாது. விடுமுறை அளிக்காவிட்டாலோ, விடுமுறை அளித்து ஊதிய பிடித்தம் செய்தாலோ அந்நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x