Last Updated : 29 Dec, 2019 06:48 PM

 

Published : 29 Dec 2019 06:48 PM
Last Updated : 29 Dec 2019 06:48 PM

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் தலைமை செயலர் திடீர் ஆய்வு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக அரசு தலைமை செயலர் க.சண்முகம் இன்று திடீரென நேரில் ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தலைமை செயலர் க.சண்முகம் நேற்று முன்தினம் வந்தார். அவரை கோயில் செயல் அலுவலர் சா.ப.அமரித், கோட்டாட்சியர் தனப்பிரியா ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனத்தில் தலைமை செயலர் சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை தலைமை செயலர் சண்முகம் இன்று காலை திடீரென ஆய்வு செய்தார்.

ரூ.33 கோடி மதிப்பீட்டில் யாத்ரீகர்கள் நிவாஸ் தங்கும் விடுதி அமையுள்ள இடத்தில் பழைய கட்டிடங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. அந்த பணிகளை தலைமை செயலர் பார்வையிட்டார். பின்னர் மூவர் சமாது அருகில் அறுபடை வீடு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் நிரந்தர நவீன வாகன நிறுத்துமிடத்தை பார்வையிட்டார்.

வள்ளிகுகை பகுதியிலிருந்து கோயில் கடற்கரை வரை ரூ.19.8 கோடி மதிப்பீட்டில் 520 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படயுள்ள கடலரிப்பு தடுப்பு சுவர் திட்ட வரைபடத்தினையும், அந்த இடத்தையும் பார்வையிட்டார். மேலும் புதிதாக அமைய உள்ள கிரி பிரகார மண்டபத்தின் வரைபடத்தை ஆய்வு செய்தார்.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளாக கழிப்பிடம், குளியலறைகள், குடிநீர் வசதி ஆகியவற்றை கூடுதலாக அமைப்பதற்கு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் புனித தீர்த்தமான நாழிகிணற்று பகுதிக்கு சென்று பார்வையிட்டார். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆய்வு பணி நடைபெற்றது.

அப்போது கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் பக்தர்களின் தேவைகளை அவர் நேரில் கண்டறிந்தார். தொடர்ந்து திருச்செந்தூர் கோயில் வளாக மேம்பாட்டு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின் போது கோயில் செயல் அலுவலர் சா.ப.அம்ரித், கோட்டாட்சியர் தனப்பிரியா, கோயில் கட்டுமான உதவி செயற்பொறியாளர் முருகன், இளநிலை பொறியாளர் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x