Last Updated : 27 Dec, 2019 05:22 PM

 

Published : 27 Dec 2019 05:22 PM
Last Updated : 27 Dec 2019 05:22 PM

உள்ளாட்சித் தேர்தல் துளிகள்: மானாமதுரையில் வாக்குச்சாவடி மாறியதால் பரபரப்பு- 2 மணி நேரம் தாமதமாக நடந்த தேர்தல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரு கிராமங்களில் வாக்குச்சாவடி மாறியதால் கிராமமக்கள் வாக்களிக்க மறுத்து தேர்தலைப் புறக்கணித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் சமரசத்தை அடுத்து வாக்களித்தனர்.

மானாமதுரை அருகே கீழப்பிடாவூர் ஊராட்சியில் கீழப்பிடாவூர், கே.பெருங்கரையில் தனித்தனி வாக்குச்சாவடிகள் உள்ளன. இதனால் இரு கிராமத்தினரும் அந்தந்த ஊர்களிலேயே இதுவரை வாக்களித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று நடந்த ஊராக உள்ளாட்சித் தேர்தலில் கீழப்பிடாவூர் கிராமத்திற்குரிய வாக்குச்சாவடி கே.பெருங்கரையிலும், கே.பெருங்கரைக்குரிய வாக்குச்சாவடி கீழப்பிடாவூரிலும் அமைக்கப்பட்டன.

இதனால் வழக்கம்போல் வாக்குச்சாவடிகளுக்கு சென்ற இரு கிராமத்தினரும் அதிர்ச்சி ஏற்பட்டது. மேலும் கீழப்பிடாவூர், கே.பெருங்கரை கிராமங்களுக்கு இடையே 3 கி.மீ. செல்ல வேண்டும். இதனால் இரு கிராமமக்களும் வாக்களிக்க மறுத்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இரு வாக்குச்சாவடிகளும் வெறிச்சோடிக் கிடந்தன.

தகவல் அறிந்த கோட்டாட்சியர் செல்வக்குமாரி தலைமையிலான அதிகாரிகள் கிராமமக்களை சமரசப்படுத்தி, வாக்குச்சாவடிகளை அந்தந்த பகுதிகளிலேயே அமைத்தனர்.

இதனால் 2 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து கிராமமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் வாக்குச்சாவடிகள் மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x