Published : 23 Nov 2019 08:41 AM
Last Updated : 23 Nov 2019 08:41 AM
சென்னை
சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டாலும் பொறியியல் கல்லூரிகளை வழக்கம்போல நிர்வகிக்கவும் தயாராக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்தார்.
இதுதொடர்பாக பதிவாளர் எல்.கருணாமூர்த்தி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கல்வியாளருமான இ.பாலகுருசாமியின் வாழ்க்கை வரலாற்றை எழுத்தாளர் பா.கிருஷ்ணன் ‘நேர்மையின் பயணம்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார்.
இந்நூல் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (நவம்பர் 23) நடைபெறவுள்ளது. விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சதாசிவம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா, சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். இதுதவிர இடஒதுக்கீடு, கல்லூரிகளை நிர்வகிக்கும் பொறுப்பு உட்பட தற்போதைய நடைமுறைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தான் அண்ணா பல்கலைக்கு உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ (இன்ஸ்டிடியூசன்ஸ் ஆப் எமினென்ஸ்) அந்தஸ்து அமல்படுத்தப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் கிடைத்தவுடன் பல்கலைக்கழகம் உயர் சிறப்பு கல்வி நிறுவனமாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT