Published : 14 Jul 2015 08:44 AM
Last Updated : 14 Jul 2015 08:44 AM
முதல்வர் ஜெயலலிதா எப்போதும் நலமுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று சென்னையில் நடந்த இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் மதுரை ஆதீனம் தெரிவித்தார்.
இந்திய தேசிய முஸ்லிம் லீக் சார்பில் சென்னை வேப்பேரியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் ஒய்.ஜவஹர் அலி தலைமை வகித்தார். இதில் அமைச்சர்கள் எஸ்.அப்துல் ரஹீம், எஸ்.கோகுல இந்திரா, சென்னை மேயர் சைதை துரைசாமி, மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் பேசியதாவது:
நபிகள் நாயகம் கூறிய கருத்துகள் அனைத்தும் இஸ்லாமியர் களுக்கானது மட்டுமில்லை. அவை அனைத்து மதங்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான கருத்துகள். மத நல்லிணக்கம் இந்தியாவில் பாதுகாக்கப்பட வேண்டும். எல்லா மதத்தவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மத நல்லிணக்கத்துக்காக குரல் கொடுக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும். அதற்கு எதிரான முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா வின் உடல்நிலை பற்றி பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. அவர் எப்போதும் நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.
இவ்வாறு மதுரை ஆதீனம் பேசினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT