Published : 28 Jul 2015 08:42 AM
Last Updated : 28 Jul 2015 08:42 AM

நுரையீரலை அழுத்திக் கொண்டிருந்த 3 கிலோ கட்டியை அறுவை சிகிச்சையில் அகற்றி ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

கட்டிட மேஸ்திரியின் நுரையீரலை அழுத்திக் கொண்டிருந்த 3 கிலோ கட்டியை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் டென்னிஸ் (48). கட்டிட மேஸ்திரி. மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த இவர், அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், வலது புற மார்பகப் பகுதியில் பெரிய கட்டி இருப்பதும், அது நுரையீரலை அழுத்திக் கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே கடந்த ஜூன் 18-ம் தேதி டென்னிஸ் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்ற முடிவு செய்தனர். அதன்படி இதயம் நுரையீரல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் கே.தாமோதரன் தலைமையில் டாக்டர்கள் சிவராமன், வசுந்தரன் மற்றும் மயக்க டாக்டர்கள் பொன்னம்பலம் நமச்சிவாயம், அனுராதா ஆகியோர் கொண்ட குழுவினர் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து சுமார் 3 கிலோ எடையுள்ள கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.

இது தொடர்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் டாக்டர் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ், இதயம் நுரையீரல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் கே.தாமோதரன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:

இவருக்கு பிறவியிலேயே கட்டி ஏற் பட்டுள்ளது. அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நுரையீரலை அழுத்தியதால், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்தது. கட்டியை அகற்றிய பிறகு, அவர் நன்றாக மூச்சு விடுகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு சுமார் ரூ.4 லட்சம் வரை செலவாகும். 10 ஆயிரம் பேரில் 2 பேருக்கு இது போன்று பிறவியிலேயே கட்டி ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x