Published : 13 Oct 2019 06:36 PM
Last Updated : 13 Oct 2019 06:36 PM
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி 5-ம் கட்ட அகழாய்வு பணி நேற்றுடன் நிறைவு பெற்றது. ஆறாம் கட்ட அகழாய்வு பணி 2020 ஜனவரியில் தொடங்குகிறது.
கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல், துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதன் மூலம் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல்துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது.
தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வு தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்றது. இதுவரை
முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 52 குழிகள் தோண்டப்பட்டு, மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்பு காசுகள், உணவு குவளை உட்பட 900-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.
இந்த அகழாய்வில் அதிகளவில் சுவர்கள் கிடைத்துள்ளன.
அகழாய்வு பணிகள் செப்.30-ம் தேதி முடிவடைய இருந்தநிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டன. மேலும் கடந்த மாதம் 4-ம் கட்ட அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன் மூலம் கீழடி நாகரீகம் 2,600 ஆண்டுகள் தொன்மையானது தெரிய வந்தது. இதனால் கீழடி மீதான ஆர்வம் அதிகரித்து, அரசியல் தலைவர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கீழடியில் குவிந்தனர்.
இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டன. இந்நிலையில் 5-ம் கட்ட அகழாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் பார்வையாள்கள் பார்வையிடவும் இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது. மேலும் நேற்று கடைசி நாள் என்பதால் பல ஆயிரம் பேர் குவிந்தனர். தொடர்ந்து சில தினங்களில் குழிகள் மூடப்படும். மேலும் 6-ம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 2020 ஜனவரியில் தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT