Published : 17 Sep 2019 11:00 AM
Last Updated : 17 Sep 2019 11:00 AM
திருநெல்வேலி
மாநில மக்களின் உணர்வு மற்றும் மொழியின் மீது மத்திய பாஜக அரசு கைவைக்க நினைத்தால், 1967-ல் காங்கிரஸ் அரசு ஆட்சியை இழந்த நிலை ஏற்படும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற அதிமுக விழாவில் கலந்துகொண்ட அவர், இவ்வாறு தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி மொழி தொடர்பான பேச்சை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், ''ஒரு மாநிலத்தின் உரிமை, மாநில மக்களின் உணர்வு, அவர்களின் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் மீது நீங்கள் கைவைப்பீர்கள் என்று சொன்னால், எப்படி 1937-ல் ராஜ கோபாலாச்சாரி வீழ்ந்தாரோ, 1967-ல் காங்கிரஸ் பேரியக்கம் எப்படி வீழ்ச்சி அடைந்ததோ, அதே நிலை பாரதிய ஜனதா கட்சிக்கும் ஏற்படும் என்பதை நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்'' என்று முனுசாமி தெரிவித்தார்.
இந்தி மொழி அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ம் தேதி இந்தி நாள் கொண்டாடப்பட்டது. இதற்கு பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ட்விட்டரில் இந்தியில் வாழ்த்துத் தெரிவி்த்தார்.
அதில் அவர் கூறுகையில், "இந்தியா பல்வேறுவிதமான மொழிகளைக் கொண்டது. ஒவ்வொரு மொழிக்கும் தனக்கே சொந்த முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால், இந்த உலகில் இந்தியாவின் அடையாளமாக ஒருமொழிதான் இருப்பது முக்கியம். இன்றுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT