Published : 10 Sep 2019 04:26 PM
Last Updated : 10 Sep 2019 04:26 PM
காட்பாடி,
காட்பாடி ரயில் நிலையம் அருகே குடிநீர் ரயிலும் பயணிகள் ரயிலும் ஒரே பாதையில் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில், காட்பாடி அருகே ஜாஃப்ராபேட்டை வழியாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே தண்டவாளத்தில் எதிர்ப்புறத்தில் மற்றொரு ரயில் நின்றுகொண்டிருந்தது. இதைக் கண்ட பயணிகள் அச்சத்தால் கூக்குரலிட்டனர். இதையடுத்து பயணிகள் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதனால் அதே மார்க்கத்தில் வந்துகொண்டிருந்த மற்ற ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. குடிநீர் ரயில் சிறிது நேரத்தில் அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து ஒன்றரை மணி நேரத் தாமதத்துக்குப் பிறகு, பயணிகள் ரயில் புறப்பட்டுச் சென்றது. இதைத் தொடர்ந்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த ரயில்களும் இயக்கப்பட்டன.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தெற்கு ரயில்வே, ''சிக்னல் கோளாறு காரணமாக குடிநீர் ரயில் நின்ற பாதையில், பயணிகள் ரயில் தவறுதலாக வந்துவிட்டது. இதனால் அனுமதிக்கப்பட்ட இடைவெளியில் ரயில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து பயணிகள் அச்சமடைய வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ரயில் நின்று கொண்டிருந்த நேரத்தில், அங்கு காத்திருந்த பயணிகள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT