Published : 09 Sep 2019 11:18 AM
Last Updated : 09 Sep 2019 11:18 AM

அமர்வை ரத்து செய்தார் தலைமை நீதிபதி: சமரச முயற்சியில் சட்ட அமைச்சர்

ராஜினாமா முடிவை அடுத்து இன்று தாம் விசாரணை நடத்தும் அமர்வையும் ரத்து செய்தார் தலைமை நீதிபதி. இதனால் 75 வழக்குகளில் 13 வழக்குகள் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதியைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் சட்ட அமைச்சர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத் தலைமை நீதிபதி தஹில் ரமானி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு பதவியேற்றார். கடந்த ஓராண்டாக அவர் தலைமை நீதிபதியாக உள்ள நிலையில், சமீபத்தில் அவரை மேகாலயா மாநிலத்துக்கு மாற்றி கொலிஜியம் பரிந்துரைத்தது. மேகாலயாவுக்கு மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கொலிஜியத்திடம் தலைமை நீதிபதி தஹில் ரமானி முறையிட்டிருந்தார்.

ஆனால், அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதாகவும், தஹில் ரமானி மேகாலயத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டதுதான் என கடந்த 5-ம் தேதி கொலிஜியம் பரிந்துரைத்தது. மேலும் மேகாலய மாநிலத் தலைமை நீதிபதி மிட்டல் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கவும் பரிந்துரைத்தது.

மூன்று நீதிபதிகளை மட்டுமே கொண்டுள்ள மேகாலய மாநிலத் தலைமை நீதிபதி பதவி என்பது அவரது பதவிக்கு அந்தஸ்து குறைச்சல் என்கிற அபிப்ராயம் அனைவர் மத்தியிலும் எழுந்தது. தலைமை நீதிபதி தஹில் ரமானியும் இதனால் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனது பதவியை அவர் ராஜினாமா செய்து குடியரசுத் தலைவருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டதாகத் தகவல் எழுந்தது.

தலைமை நீதிபதி தஹில் ரமானியின் மாற்றத்தை எதிர்த்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், விரிவடைந்த பொதுக்குழு கூட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க வேண்டிய வழக்குகள் அனைத்தும் பட்டியலிடப்படவில்லை. இதுகுறித்து விசாரித்ததில் தலைமை நீதிபதி அமர்வு இன்று ரத்து செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றப் பதிவாளர் தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி பணிக்கு வரவில்லை என்பதால் அமர்வு ரத்து செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும் 75 வழக்குகளில் 13 வழக்குகளை இரண்டாவது அமர்வான நீதிபதி வினித் கோத்தாரி, சரவணன் அமர்வு விசாரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நீதித்துறையில் ஏற்பட்டுள்ள இத்தகைய நெருக்கடி அரசுத் துறையையும் பாதிக்கும் என்பதால் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மூலம் சமாதானப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ராஜினாமா கடிதம் அளித்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று காலை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை நீதிபதி தஹில் ரமானியைச் சந்தித்துப் பேசினார். அப்போது ராஜினாமா முடிவைக் கைவிடும்படியும், வழக்கமான பணிகளைத் தொடரும்படியும் அவர் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பில் பேசப்பட்டது குறித்த அதிகாரபூர்வத் தகவல் எதுவும் வெளிவரவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x