Last Updated : 17 Aug, 2019 04:52 PM

 

Published : 17 Aug 2019 04:52 PM
Last Updated : 17 Aug 2019 04:52 PM

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரும் 28-ம் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்கு வரும் 28-ம் தேதி நீர் திறக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால், விவசாயிகள் குறுகிய கால நெல் ரகங்களை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் முதல் போக சாகுபடி ஜூனில் துவங்குவது வழக்கம். இதற்கு மே இறுதியில் இப்பகுதி விவசாயிகள் நாற்றுப்பாவு செய்து முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பிற்காக காத்திருப்பர்.

இதனைத் தொடர்ந்து ஜூனில் துவங்கி ஆகஸ்ட் வரை குறைந்தது 90 நாட்கள் 400 கனஅடி வீதம் நீர் திறக்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை உரிய நேரத்தில் துவங்கவில்லை. பாசனத்திற்கு நீர் திறக்காததால் லோயர்கேம்ப் முதல் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், பழநிசெட்டிபட்டி என்று சுமார் 14ஆயிரத்து 707 ஏக்கர் விளைநிலங்கள் தரிசாகவே கிடக்கிறது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கேரளாவில் மழைப் பொழிவு அதிகரித்து அணைநீர்மட்டமும் திருப்திகரமாக உள்ளது. நேற்று நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 554 கனஅடிநீர்வரத்தும், ஆயிரத்து 700கனஅடிநீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது. நீர்மட்டம் 131.50அடியாக உள்ளது.

கேரளப் பகுதியில் குறைந்திருந்த மழை தற்போது மீண்டும் சாரலாக உருவெடுத்துள்ளது. எனவே நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
இவற்றை எல்லாம் குறிப்பிட்டு மாவட்ட நிர்வாகம் தமிழக அரசிற்கு அணையில் இருந்து நீர் திறக்க பரிந்துரை செய்துள்ளது. வரும் 28-ம் தேதி நீர் திறப்பு இருந்தால் விவசாயத்திற்கு சாதகமான சூழ்நிலை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த தேதியில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், முதல்போக சாகுபடி பாதிப்பு, தற்போதைய நீர்இருப்பு உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட தேதியை குறிப்பிட்டிருந்தாலும் அவசரநிலை கருதி முன்னமே திறக்க வாய்ப்புள்ளது என்றனர். 400 கனஅடி வீதம் 90 முதல் 120 நாள் வரை இந்த நீர்திறப்பு இருக்கும் என்று தெரிகிறது.

குறுகிய ரகங்களின் தேவை அதிகரிப்பு..

இது குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மதுரை மண்டலச் செயலாளர் திருப்பதிவாசகன் கூறுகையில், நாற்றில் இருந்து மகசூல் வரை 120 நாள் வரை ஆகலாம். ஆனால் அதற்கான நீர் இருப்பும், காலச் சூழலும் சரியாக இருக்குமா என்று விவசாயிகளிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எனவே குறுகியகால ரகத்தைத் தேர்வு செய்வதில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். இதற்காக எம்ஜிஆர்.100, ஆடுதுறை 45போன்ற ரகங்களை தேர்வு செய்கின்றனர் என்றார்.

இருப்பினும் பெரும்பாலானோர் தனியார் நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் வீரிய ஒட்டுரகங்களையே வாங்கி பயிரிடுவதில் முனைப்பு காட்டுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x