Published : 02 Aug 2019 12:25 PM
Last Updated : 02 Aug 2019 12:25 PM

இந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்; வைகோவின் கன்னிப் பேச்சு

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா, வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படும் என, மாநிலங்களவையில் வைகோ பேசியுள்ளார்.

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அப்போது மாநிலங்களவை எம்.பி. வைகோ அம்மசோதா குறித்துப் தன் கன்னிப்பேச்சில் பேசியதாவது:

"என்னுடைய 55 ஆண்டு கால பொதுவாழ்க்கையில், இந்த நாள் மறக்க முடியாத நாள். 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அவையில் இன்று என்னுடைய கன்னி உரை ஆற்றுகின்றேன். 41 ஆண்டுகளுக்கு முன்பு, 1978 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் இடம் பெறுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பெரியார், அண்ணா ஆகிய பெருந்தலைவர்களின் வழிவந்த மறைந்த திமுக தலைவர் கருணாநிதி எனக்கு அந்த நல்ல வாய்ப்பை நல்கினார்.

அவருக்கும், திமுகவுக்கும் நான் கடமைப்பட்டு இருக்கின்றேன். திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த மறைந்த முரசொலி மாறன் நாடாளுமன்றப் பணிகளில் என்னை வார்ப்பித்தார். 1978 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி மத்திய - மாநில உறவுகள் குறித்த தனிநபர் மசோதா ஒன்றில் கன்னி உரை ஆற்றினேன். பூபேஸ் குப்தா, பேராசிரியர் என்.ஜி.ரங்கா போன்ற பெருந்தகையோர் என்னை வாழ்த்தினார்கள்.

1984, 1990 ஆம் ஆண்டுகளில் கருணாநிதி என்னை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்தார். இந்த அவையில் என்னுடைய மூன்றாவது பணிக்காலம் 1996 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பெருந்தன்மையோடும், பேரன்போடும் என்னை இந்த அவைக்கு அனுப்பி வைத்து இருக்கின்றார்கள்.

அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.1998, 1999 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்கள் அவைத் தேர்தலில் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டு பணியாற்றினேன்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா, ஒரு அடக்குமுறைச் சட்டம் ஆகும். மனித உரிமை ஆர்வலர்கள், சிறுபான்மை மக்கள், இந்த அரசை எதிர்ப்பவர்களின் குரல்வளையை நெறிக்கின்ற சட்டம் ஆகும். நான் மிகுந்த வேதனையோடு குறிப்பிட விரும்புகின்றேன். முன்பு எவரெல்லாம் இந்தகைய அடக்குமுறைச் சட்டங்களால் பாதிக்கப்பட்டார்களோ, அவர்கள் பின்பு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்பு அவர்களே இந்தகைய அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவந்தார்கள்.

பிரிட்டிஷார் ஆட்சியின்போது ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் இத்தகைய முன்னெச்சரிக்கை தடுப்புக் காவல் சட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார். ஆனால் விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை அவர்கள் ஏற்றபோது, அவர்களே மீண்டும் இந்தக் கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.

இந்திரா காந்தி, மன்னர் மானியத்தை ஒழித்து, 14 வங்கிகளை நாட்டு உடைமை தேசிய வங்கிகள் ஆக்கினார், பாராட்டுப் பெற்றார். அலகாபாத் உயர் நீதிமன்றம் பிரதமர் இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு அளித்தபோது, 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள் பிரதமர் இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தார். நாடாளுமன்ற ஜனநாயகத்தை முடக்கினார்.

லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் ஜனசங்கம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தார்கள். அதே நாள் இரவில் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண், ஜோதிர்மயி பாசு, மொரார்ஜி தேசாய், சரண் சிங், வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலை வர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மிசா என்ற உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜார்ஜ் பெர்ணான்டஸ் சில மாதங்களுக்குப் பின்பு கைதானார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். திமுக நெருக்கடி நிலையைக் கடுமையாக எதிர்த்தது. கருணாநிதி, நெருக்கடி நிலையை எதிர்த்து ஒரு தீர்மானம் இயற்றினார். அந்தத் தீர்மானம்தான், 'இந்திய ஜனநாயகத்தின் மேக்னா கார்ட்டா' என்று நம்பூதிரிபாட் கூறினார்.

ஜனநாயகத்தைக் காக்க மேற்கொண்ட இந்த அறப்போராட்டத்தின் விளைவாக, 1976 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் தமிழ்நாட்டில் திமுக அரசு கலைக்கப்பட்டது. நான் உட்பட 500-க்கும் மேற்பட்ட திமுகவின் முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டோம். நான் பாளையங்கோட்டை, சேலம் சிறைகளில் ஓராண்டு மிசா கைதியாக அடைக்கப்பட்டு இருந்தேன்.

நெருக்கடி நிலையால் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னரும், பாடம் கற்றுக்கொள்ளாத காங்கிரஸ் கட்சி 1980 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, தடா என்ற கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்தது. என்னுடைய உடன்பிறந்த தம்பி வை.ரவிச்சந்திரன் அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கை, கால்களை இழந்த விடுதலைப் புலிகளை தன் வீட்டில் தங்கவைத்து மருத்துவம் செய்ததற்காக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு என் தம்பியைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அவர் ஓராண்டு சிறையில் பூட்டப்பட்டு இருந்தார். ஒவ்வொரு முறை நீதிமன்றத்துக்கும், மருத்துவமனைக்கும் கொண்டு சென்ற வேளைகளில் அவரது கைகளுக்கு விலங்கு பூட்டித்தான் கொண்டு சென்றார்கள்.

2002 ஆம் ஆண்டு, பெரும் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி, மிகக் கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை கொண்டுவந்தபோது, நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து விவாதிப்பதற்காக நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில், நானும், முரசொலி மாறனும் மட்டுமே இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தோம்.

நான் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் பொடா சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்களைக் கைது செய்யும் பிரிவு நீக்கப்பட்டது என்பதை, ஆங்கில நாளிதழ் ஒன்று பாராட்டி எழுதி இருக்கின்றது. பொடா சட்டத்திற்கு முதலாவது பலி யார் என்றால், அது வேறு யாரும் அல்ல நானேதான்!

2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் நாடாளுமன்ற மக்களவையில் குஜராத் பிரச்சினை குறித்து நடைபெற்ற விவாதத்தில் நான் பேசும்போது, "நான் விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தேன்; இன்றும் ஆதரிக்கின்றேன்; நாளையும் ஆதரிப்பேன்" என்று பேசினேன்.

நாடாளுமன்றத்தில் பேசிய இந்த உரையை, திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேற்கோள் காட்டிச் சொன்னேன். அதற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா , பொடா சட்டத்தின் கீழ் என்னைக் கைது செய்யும்படி உத்தரவு பிறப்பித்தார். அப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன். சிகாகோவில் நடைபெற்ற தமிழ் அறிஞர் தேவநேயப் பாவாணர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றேன்.

அங்கிருந்து திரும்பி வரும்போது, 2002 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் நாள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டேன். ஒரு சர்வதேச பயங்கரவாதியைப் போலக் கருதி, 500 காவலர்கள் படை சூழ என்னைக் கொண்டுபோய் வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்கள். இந்தியாவில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான். 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தேன்.

வாஜ்பாய் வேதனை அடைந்தார். வேலூர் சிறைக்கே வந்து என்னைப் பார்க்க விரும்பினார்கள். ஆனால் நெறிமுறைகள் அதற்கு இடம் தரவில்லை. எனவே பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸையும், வெங்கையா நாயுடுவையும் வேலூர் சிறைக்கு அனுப்பி என்னைச் சந்திக்கச் செய்தார்கள். ஜார்ஜ் பெர்ணான்டஸ், மூன்று முறை வேலூர் சிறைக்கு வந்து என்னைச் சந்தித்தார்.

நான் வேலூர் சிறையில் இருந்தபோது, உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தேன். புகழ்பெற்ற வழக்குரைஞர் பாலி நாரிமன் எனக்காக வாதாடினார்கள். அந்த வழக்கில், "விடுதலைப் புலிகள் போன்ற தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை வெறுமனே ஆதரித்துப் பேசுவது மட்டுமே பொடா சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரிய குற்றம் ஆகாது" என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சி அடையக்கூடும். இப்போதும் நான் 124 ஏ சட்டத்தின் கீழ் தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி. 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக, 2019 ஆம் ஆண்டு இந்த ஜூலை மாதத் தொடக்கத்தின் 5 ஆம் நாள் சென்னை சிறப்பு நீதிமன்றம் எனக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்து இருக்கின்றது.

பிரிட்டிசார் ஆட்சியின்போதுதான், பாலகங்காதர திலகரும், அரவிந்த் கோசும் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு இருக்கின்றார்கள். ஆனால் அதே பிரிட்டன் அரசு இன்று தங்கள் நாட்டில் அந்தச் சட்டத்தை நீக்கிவிட்டது.

இந்திய விடுதலைக்குப் பின்னர் தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் 124 ஏ பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்ட ஒரே ஒரு நபர் நான்தான். அந்த வகையில் என்னுடைய பெயர் இந்தியக் குற்றவியல் சட்ட வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. இப்போது நான் பிணை விடுதலையில் இருக்கின்றேன். என் மீதான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. இன்னும் இரண்டு வாரங்களில் அந்த வழக்கு விசாரணைக்கு வருகின்றது.

அந்த வழக்கில் ஒருவேளை சென்னை உயர் நீதின்றம் எனக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்தால், நான் இந்த அவையின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிடுவேன். இனி என்னால் திரும்ப இங்கே வரமுடியாது. அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் லட்சியங்களுக்காக வாழ்கிறேன்.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் பல்வேறு சிறைகளில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டேன். என்னுடைய அனுபவத்தில், ஒரு அரசியல்வாதி எழுதுவதற்கும், படிப்பதற்கும் ஏற்ற இடம் சிறைச்சாலைதான் என்பது என் கருத்து. இந்தச் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்கள் அவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

ஐநா பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தின்படியும், சர்வதேச நாடுகள் கலந்துகொண்ட பல்வேறு மாநாடுகளில் வலியுறுத்தப்பட்டதற்கு இணங்கவும், இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்திருப்பதாக மக்களவையில் அரசு கூறி இருக்கின்றது.

இந்தச் சட்டத் திருத்தம் எந்த ஒரு தனி மனிதனையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்துவதற்கே பயன்படும். அச்சத்தினை மக்கள் மனதில் விதைப்பது இன்றைய அரசு.எந்த ஒரு சட்டமும் மனித உரிமைக் காவலர்களையும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்களையும் மேலும் அடக்குமுறைக்கு உள்ளாக்குவதற்குப் பயன்படுத்தப்படக் கூடாது.

அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய புலனாய்வு முகமைத் திருத்தச் சட்டத்திற்கு ஒத்திசைவாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு இருக்கின்றது. ஆனால் தேசியப் புலனாய்வு முகமை பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவாக ஓரவஞ்சகமாகச் செயல்பட்டு வருகின்ற நிலையில், இந்தச் சட்டம் தங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படாது என்று சிறுபான்மை மக்கள் எப்படி நம்ப முடியும்?

எனவே மிசா, தடா, பொடா மற்றும் இந்தச் சட்டவிரோதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எப்படி ஒருவர் பாதிக்கப்படுகின்றார் என்பதற்கு நானே எடுத்துக்காட்டாக நிற்கின்றேன்.

மூன்று காரணங்களுக்காக இந்தச் சட்டத் திருத்தத்தை நான் எதிர்க்கின்றேன்.

1. இந்தச் சட்டம் தனி நபர்களைக் குறி வைக்கின்றது. அவர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகின்றது. நான்காவது அட்டவணையில் அவர்களைப் பயங்கரவாதிகள் என்று சேர்ப்பதற்கு முன்பாக, அவர்கள் தரப்பில் எந்த விளக்கமும் அளிப்பதற்கு இந்தச் சட்டம் இடம்தரவில்லை.

மாறாக இந்தச் சட்டம் எந்த ஒரு தனி நபரையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்துவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கின்றது.இது ஜனநாயகத்துக்கு எதிரானது. இந்திய அரசியல் சட்டம் வழங்கி இருக்கின்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

2. காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர்தான் ஒருவரை விசாரிக்க முடியும் என்ற நிலையை மாற்றி, தேசிய புலனாய்வு முகமையின் ஆய்வாளரே எவரையும் விசாரிக்க முடியும் என்று இந்தச் சட்டத் திருத்தம் கூறுகின்றது.

3. இந்தச் சட்டம் சாதாரண மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. இந்தச் சட்டத்தின் வாயிலாக மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கின்றது. இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டு அமைப்புதான். ஆனால், 'இந்தியா ஒரே நாடு' என்ற கருத்தை இந்த அரசு திணிக்க முற்படுகின்றது. அது இந்திய ஒற்றுமைக்குக் கேடானது.

உண்மையில் இந்த நாடு, அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போல 'இந்திய ஐக்கிய நாடுகள்' என்றே அழைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே போதிய சட்டங்கள் இருக்கின்ற நிலையில், கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தம் தேவையற்றது.

எனவே இந்தக் கடுமையான, அடக்குமுறையான, சட்டவிரோத நடவடிக்கைகள் திருத்த மசோதாவை முற்றிலும் நிராகரித்து ஒதுக்கித் தள்ள வேண்டும் என இந்த அவையை வேண்டுகிறேன். தவறினால் எதிர்கால இந்திய வரலாற்றில் மக்களால் இந்தச் சட்டம் குப்பைக் கூடையில் தூக்கி எறியப்படும்"

இவ்வாறு வைகோ பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x