Published : 31 Jul 2019 04:11 PM
Last Updated : 31 Jul 2019 04:11 PM
கூட்டுறவு சங்கம் பதிவு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பான வழக்கில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், மதுரை ஆவின் தலைவருமான ஓ.ராஜாவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேனியைச் சேர்ந்த அமாவாசை, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை ஆவின் தலைவராக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உள்ளார்.
இவர் தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகே உள்ள ரோஸி நகர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார். இதன் அடிப்படையில் ஓ.ராஜா ஆவின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.
ரோஸி நகர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டதில் மோசடி நடைபெற்றுள்ளது. இந்த பதிவுக்காக தவறான தகவல்கள், போலியான ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மதுரை ஆவின் உயர் அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.
இது தொடர்பாக மதுரை பால்வள துணை பதிவாளருக்கு பல மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தவறான தகவல்கள் அளிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட உப்புக்கோட்டை ரோஸி நகர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கப் பதிவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக பால்வள மேம்பாட்டுத்துறை துணை பதிவாளர், மதுரை ஆவின் தலைவர் ஓ.ராஜா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT