Last Updated : 25 Jul, 2019 04:22 PM

 

Published : 25 Jul 2019 04:22 PM
Last Updated : 25 Jul 2019 04:22 PM

இட ஒதுக்கீடு விவகாரம்: எஸ்பிஐ வங்கியினுள் நுழைய முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது போலீஸார் தடியடி

புதுச்சேரி

எஸ்பிஐ வங்கியில் எழுத்தர் பணிக்கான தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில், காவல்துறைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் லேசான தடியடி நடத்தப்பட்டது.

ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணிக்கான தேர்வில், பிற வகுப்பினர் தேர்ச்சி பெற அதிக கட் ஆஃப் மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28.5 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி என்பது சமூக நீதியைப் பாதிக்கும் செயல் என்று பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிப்பதாக மத்திய அரசைக் கண்டித்தும் புதுச்சேரி சுப்ரேன் வீதியில் உள்ள எஸ்பிஐ வங்கி தலைமை அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இன்று (வியாழக்கிழமை) முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் 50 பேர் கலந்து கொண்டனர்.

வங்கி அருகில் இருந்து ஊர்வலமாக வந்த அவர்களை வங்கியின் முன்பு போலீஸார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், திடீரென பிரதமர் மோடியின் உருவ பொம்மையைத் தீயிட்டு எரிக்க முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்பில் இருந்த பெரியக்கடை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து அவர்கள் வங்கிக்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது லேசான தடியடி நடத்தினர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரையும் கைது செய்து, போலீஸ் வகனத்தில் ஏற்றிச் சென்றனர். இந்தப் போராட்டம் காரணமாக எஸ்பிஐ வங்கி தலைமை அலுவலகம் அருகில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x