Published : 17 Mar 2014 10:00 AM
Last Updated : 17 Mar 2014 10:00 AM

அதிமுக-வுக்கு வாக்களித்தால் இந்தியா வல்லரசாகும்: கள்ளக்குறிச்சியில் ஜெயலலிதா பேச்சு

மக்களவைத் தேர்தலில் அதிமுக-வுக்கு வாக்களித்தால் இந்தியா வல்லரசாகும் என்று கள்ளக்குறிச்சி பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தானில் ஞாயிற்றுக் கிழமை கள்ளக்குறிச்சி மக்களவை அதிமுக வேட்பாளர் காமராஜை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நடைபெற உள்ள தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. இந்திய மக்கள் விடுதலை பெறும் தேர்தலாகும். 2ஜி ஊழலை முன்னின்று நடத்திய கட்சி திமுக. காங்கிரஸும் திமுகவும் இணைந்து சாமான்யமக்களுக்கு எதிராக செயல்பட்டதால் பொருளாதாரம் ஸ்தம்பித்தது.

புனிதப் பயணத்துக்கு மானியம்

மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையால் கடந்த 33 மாதங்களில் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய திட்டங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் தமிழக மக்களுக்கு சலுகை விலையில் அத்தியாவசிய பொருட்களை அளித்துள்ளேன். மேலும் சமையல் எரிவாயுக்கான மதிப்பு கூட்டு வரியை ரத்து செய்துள்ளேன். இந்து , முஸ்லீம், கிறிஸ்துவ மக்கள் புனிதப் பயணம் மேற்கொள்ளவும் மானியம் அளித்துள்ளேன்.

கடந்த திமுக அரசு உற்பத்திக்குத் தேவையான நடவடிக்கை எடுக்காததால் மின்பற்றாக்குறை ஏற்பட்டது.தற்போது தேவையான நடவடிக்கை எடுத்ததால் 2,500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உறபத்தி செய்ததால் தற்போது மின்பற்றாக்குறை பெருமளவு குறைந்துள்ளது. விரைவில் மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றுவிடும். எதிர்காலத்தில் 5,500 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங் களாக அறிவித்து நிவாரணமும் வழங்கப்பட்டது, இந்தியாவி லேயே வறட்சி நிவாரணம் வழங்கிய மாநிலம் தமிழ்நாடுதான்.

கள்ளகுறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் சங்கரா புரம்,கல்வரா யன் மலையை உள்ளடக்கி சின்னசேலம் வட்டமாக அறிவிக்கப் பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை நவீன சேமிப்பு கிடங்கு கட்ட ரூ. 1.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குளிர்பதனக் கிடங்கு அமைக்க ரூ.31.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அதிபரைப் போர்க் குற்றவாளி என அறிவித்து தனி ஈழம் பெற பொது வாக்களிப்பு நடத்தவேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பட்டன.

அவற்றின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்க திமுகவும் வற்புறுத்தவில்லை.கச்சத்தீவை மீட்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. காங்கிரஸ் அரசு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே இல்லை என்றது. இதற்கு திமுக எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இந்தியா வல்லரசு

காங்கிரஸ் ஆட்சியை தூக்கி எறியவேண்டும். நீங்கள் வேறு கட்சிக்கு வாக்களித்தால் உங்கள் வாக்கு வீணாகிவிடும். அதிமுக வுக்கு வாக்களித்தால் இந்தியா வளமான வல்லரசாகவும், வலிமையான நல்லரசாகவும் அமையும் என்று ஜெயலலிதா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x