Published : 23 Jul 2015 09:11 AM
Last Updated : 23 Jul 2015 09:11 AM

நீர் நிலையை பாதுகாப்பதற்காக போரூர் ஏரியில் கரைதான் அமைக்கிறோம்: பசுமை தீர்ப்பாயத்தில் பொதுப்பணித்துறை விளக்கம்

போரூர் ஏரியை பாதுகாக்கும் வகையில் கரைதான் அமைக்கிறோம். அங்கு சாலை அமைக்கப்படவில்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.

போரூர் ஏரியின் ஒரு பகுதியை தனியார் கல்வி நிறுவனத்துக்கு அரசு வழங்கியிருப்பதாகவும், இந்த ஏரியின் நடுவில் மண் மற்றும் கட்டிடக் கழிவுகளைக் கொட்டி சாலை அமைக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின. அதன் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.மேகநாதன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

இந்த ஏரியின் நடுவில் அமைக்கப்பட்டு வரும் சாலையால் நீர்நிலைக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் சாலை அமைக்கவும், அங்கு மண்ணை கொட்டவும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். ஏரியை புனரமைத்து பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த அமர் வின் உறுப்பினர்கள், ஏரியில் மண் மற்றும் கட்டிடக் கழிவுகளைக் கொட்டவும், சாலை அமைக்கவும் இடைக்காலத் தடை விதித்தனர்.

இந்நிலையில் இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் பி.ஜோதிமணி, தொழில்நுட்பத் துறை உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலை யில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பொதுப்பணித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்துல் சலீம், ‘போரூர் ஏரி யில் கடந்த ஓராண்டாக ஏரியின் நீர்மட்டத்தை உயர்த்த தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏரியை பாதுகாக்கும் விதமாக அதன் ஒரு எல்லையில் மண் கொட்டி கரை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு சாலை எதுவும் அமைக்கப்படவில்லை’ என்றார்.

‘செய்தித்தாள்களில் வந்த படங்களை பார்க்கும்போது அவ்வாறு தெரியவில்லையே’ என அமர்வின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

‘இது தொடர்பான வரைபடம் மற்றும் வருவாய்த்துறை ஆவணங் களை அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கிறேன்.அதனால் ஏரிக்கு சொந்தமான நிலத்தில் ஒரு அங்குலம் அளவு கூட தனியாருக்கு வழங்கப் பட மாட்டாது’ என்று பொதுப் பணித்துறை தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

அதனைத் தொடர்ந்து அமர் வின் உறுப்பினர்கள், அடுத்த விசாரணையின்போது பொதுப் பணித்துறை சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை ஏரியில் மண் கொட்ட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை தொடரும் என்று உத்தரவிட்டு, மனு மீதான அடுத்த விசாரணையை ஜூலை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x