Published : 16 Jul 2015 07:59 AM
Last Updated : 16 Jul 2015 07:59 AM

ஆந்திர என்கவுன்ட்டர் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கில் மனுதாரராக சேர வேண்டும் - தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

ஆந்திராவில் தமிழக தொழிலா ளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப் பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசு தங்களையும் மனுதாரராக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

ஆந்திராவில் தமிழக கூலித் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் சார்பில் சென்னையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வைகோ தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பீம்ராவ், மக்கள் கண்காணிப்பக அமைப்பின் செயல் இயக்குநர் ஹென்றி டிபேன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி உள் ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின்னர் நிருபர் களிடம் வைகோ கூறியதாவது:

ஆந்திர வனத்துறை மற்றும் காவல்துறையினரால் 20 கூலித் தொழிலாளர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக நேரில் விசாரிக்க சென்றவர்களுக்கு ஆந்திர அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. தேசிய மனித உரிமைகள் ஆணையம் இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதற்கு ஆந்திர உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி டிபேன் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இவ்வழக்கில் தமிழக அரசு தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுதொடர்பாக, தமிழக முதல்வரை இம்மாத இறுதிக்குள் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளேன்.

இவ்வாறு வைகோ கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x