Published : 19 Apr 2015 01:05 PM
Last Updated : 19 Apr 2015 01:05 PM
நாடு முழுவதும் கரும்பு விவசாயம் வரலாறு காணாத நெருக்கடியில் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கும் சர்க்கரை ஆலைகளுக்கும் இடையே எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசு தீர்வு காணுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சர்க்கரை உற்பத்தியில் உலக அளவில் பிரேசிலுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் உலக அள வில் கரும்பு விளைச்சல் அபரிமித மாக அதிகரித்திருப்பதால் சர்க் கரை விலை கடும் சரி வைச் சந்தித்துள்ளது. இத னால், நஷ்டத்தை சந்தித்து வருவதாக ஆலை உரிமை யாளர்களும், நிலுவைத் தொகை கிடைக்காததால் கரும்பு பயிரிடு வதையே நிறுத்திவிடுவோம் என விவசாயிகளும் பரஸ்பரம் குறைகூறி வருகின்றனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் தலைமை இயக்குநர் அபினாஷ் வர்மா கூறியதாவது:
நாடு முழுவதும் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.19 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.5,900 கோடி அதிகரித்துள்ளது. ஆலைகளிடம் கையிருப்பில் உள்ள சர்க்கரையை உற்பத்தி விலைக்கு அரசு கொள்முதல் செய்தால்கூட ரூ.900 கோடி அளவுக்கே நிலுவைத் தொகையை வழங்க முடியும்.
சர்க்கரை விலைக்கு ஏற்ப கரும்புக்கு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என அரசு நினைத்தால் நேரடி மானியம் வழங்க வேண்டும். அரசு நிர்ணயிக்கும் விலையை வழங்கினால் ஆலைகளை நடத்த முடியாத நிலை ஏற்படும் என்றார்.
தமிழ்நாடு கரும்பு உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் தலைவர் புண்ணியமூர்த்தி கூறும்போது, ‘‘சர்க்கரையைப் பற்றி பேசும் ஆலை முதலாளிகள் எத்தனால், எரிசாராயம், மின்சாரம், காகிதம், உரம் ஆகியவற்றில் கிடைக்கும் லாபம் பற்றி பேசுவதில்லை. தமிழகத்தில் 18 அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், 20 தனியார் ஆலைகளும் உள்ளன. மேலும் 2 ஆலைகளுக்கு அனுமதி கேட்டுள்ளனர். நஷ்டம் என்றால் இத்தனை ஆலைகள் எதற்கு?
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமானால் சர்க்கரை இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும். இறக்குமதிக்கு மானியம் வழங்குவதை நிறுத்த வேண்டும். ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்காக ஆலைகளுக்கு கடந்த ஆண்டு மத்திய அரசு வட்டியில்லா கடனாக ரூ.7,000 கோடி வழங்கியது. ஆனாலும், நிலுவைத் தொகையை வழங்க மறுக்கிறார்கள்’’ என குற்றம்சாட்டினார்.
‘‘கடன் வாங்கி விவசாயம் செய்கிறோம். கொடுத்த கரும்புக்கு பணம் கிடைக்க ஆண்டுக்கணக் கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்நிலை நீடித்தால் கரும்பு விவசாயத்தையே கைவிட வேண்டியிருக்கும்’’ என்று வேத னையுடன் தெரிவித்தார் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி சிவானந்தம்.
விவசாயிகளின் குற்றச்சாட்டு கள் குறித்து தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத் தலைவர் பழனி பெரியசாமியிடம் கேட்டபோது, ‘‘எப்போதும் இல் லாத அளவுக்கு சர்க்கரை உற்பத்தி அதிகரித்திருப்பதால் விலை சரிந்துள்ளது. வாட் வரி அதிகமாக இருப்பதால் எத்தனால், எரிசாராயம் ஆகியவற்றில் லாபம் இல்லை. ஆலைகள் தயாரிக்கும் மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு ரூ.3.15 முதல் ரூ.4.27 வரைதான் கொடுக்கின்றனர். இந்த உண்மை கள் விவசாயிகளுக்கும் தெரியும். இது சர்க்கரைத் தொழிலுக்கு மோச மான காலகட்டம். விவசாயிகள் இல்லையெனில் ஆலைகள் இல்லை. எனவே, விவசாயிகளை ஏமாற்றும் எண்ணம் ஆலைகளுக்கு இல்லை’’ என்றார்.
சர்க்கரை விலைக்கு ஏற்ப கரும்புக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது ஆலைகளின் கோரிக்கை. கட்டுப்படியாகும் விலை உடனடியாக வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இதற்கு அரசு எப்படி தீர்வு காணப்போகிறது என்பதைப் பொறுத்துதான் கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரைத் தொழிலின் எதிர்காலம் உள்ளது.
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமானால் சர்க்கரை இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT