Last Updated : 18 Apr, 2015 09:50 AM

 

Published : 18 Apr 2015 09:50 AM
Last Updated : 18 Apr 2015 09:50 AM

சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு: தொழில் துறையினரை ஈர்க்க தமிழக அதிகாரிகள் வெளிநாடு பயணம்

சென்னையில் நடைபெறவுள்ள உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற் காக தமிழக அதிகாரிகள் வெளிநாடு பயணம் மேற் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் தொழில் முதலீட்டை அதிகரிப்பதற்காக உலக முதலீட்டாளர்கள் மாநாடு மே 23,24 தேதிகளில் சென்னையில் நடக்கிறது. அதில், பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த தொழில்துறையினரை பங்கேற்கச் செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இம்மாநாட்டுக்காக, தமிழக அரசு ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளது.

இது குறித்து தொழில் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

இந்த மாநாட்டின் மூலமாக, தமிழகத்தில் ஜவுளி, மரபுசாரா எரிசக்தி, ஆட்டோமொபைல், ரசாயனம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 12 துறைகளில் முதலீடுகளை ஈர்க்க வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே சூரியமின்சக்தி உற்பத்தியில் ஜெர்மனிதான் முன்னணியில் உள்ளது. அங்குள்ள ஹானோவர் மற்றும் ஸ்டட்கார்ட் நகரங்களில் உலகின் மிகப்பெரிய தொழிற் பொருட்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது.

அங்கு வரும் தொழில் துறையினரைச் சந்தித்து மரபுசாரா எரிசக்தித் துறை உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக உயரதி காரிகள் சென்றுள்ளனர். அக்கண்காட்சியில் தமிழக அரசு சார்பில் ஸ்டால் அமைக்க மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் உதவியது.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 23 முதல் 28 வரை, அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ மற்றும் சியாட்டில் நகரங்களில் தமிழக உயரதிகாரிகள் குழுவினர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர். 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, சென்னையில் நடைபெறவுள்ள உலகத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வரும்படி அங்குள்ள தொழில்துறையினருக்கு அழைப்பு விடுப்பார்கள். குறிப்பாக சூரியமின்சக்தி உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளனர்.

இந்த முதலீட்டாளர் மாநாட்டில் ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள், தங்களது பங்கேற்பை உறுதி செய்துள்ளன. சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட இதர ஆசிய நாடுகளும் சாதகமான பதில்களைத் தெரிவித்துள்ளன.

தமிழகத்திலும்

உள்ளூர் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தமிழகத்திலும் ஏப்ரல் 18 (கோவை), ஏப்ரல் 21 (சேலம்), ஏப்.23 (மதுரை), ஏப்.24 (தூத்துக்குடி) மற்றும் ஏப்.28 (திருச்சி) ஆகிய இடங்களில் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் குஜராத்தில் வெற்றி கரமாக நடத்தி முடிக்கப்பட்ட தொழில்முதலீட்டாளர்கள் மாநாட்டில் (வைப்ரன்ட் குஜராத்), அதற்கான பல்வேறு ஏற்பாடு களைச் செய்த தனியார் நிறுவனத்திடமே தமிழக மாநாட்டுக்கான பணிகளை கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x