Published : 09 May 2014 10:00 AM
Last Updated : 09 May 2014 10:00 AM

மாமல்லபுரம் சித்திரை திருவிழாவுக்கு அனுமதி இல்லை: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா நடத்த இந்த ஆண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக 'இந்திய மக்கள் மன்றம்' என்ற அமைப்பைச் சேர்ந்த வராகி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.“கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரைத் திருவிழாவுக்கு அனுமதி தரக் கூடாது என்று கோரி நான் காவல் துறையிடம் கோரிக்கை மனு அளித்திருந்தேன். எனினும் நிபந்தனைகளின் அடிப்படையில் நிகழ்ச்சிக்கு காவல் துறை அனுமதி அளித்தது.

ஆனால் அந்த நிபந்தனைகளை மீறி வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சியை நடத்தியதன் காரணமாக ஏராளமான வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் இந்த ஆண்டு வரும் மே 14-ம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரைத் திருவிழா நடத்த வன்னியர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்தால் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறக் கூடும் என்பதால் அனுமதி வழங்கக் கூடாது என அரசுக்கும், காவல் துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று தனது மனுவில் வராகி கோரியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் நீதிபதிகள் ஆர்.சுதாகர், கே.கே.சசிதரன் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.விஜேந்திரன் ஆஜரானார். அப்போது, “மாமல்லபுரத்தில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடத்த அனுமதி மறுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்” என்று அரசு வழக்கறிஞர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x