Published : 10 Apr 2015 09:20 PM
Last Updated : 10 Apr 2015 09:20 PM

ஆந்திராவில் மாயமான தமிழக தொழிலாளர்கள் 40 பேரை ஆஜர்படுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேருடன் சென்ற 40 கூலித் தொழிலாளர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.

மதுரை அல்அமீன் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.மகாராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று முன்தினம் தாக்கல் செய்த மனு:

ஆந்திரா மாநிலம், திருப்பதி சேஷாசல வனப் பகுதியில் தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திரா அதிரடிப்படையினர் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். கொல்லப்பட்ட 20 பேரில், 8 பேர் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோது, போலீஸாரால் பஸ்ஸில் இருந்து கட்டாயப்படுத்தி கீழே இறக்கி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொன்றுள்ளனர்.

20 பேரின் உடல்களில் சாட்டையால் அடிக்கப்பட்டதற்கான அடையாளங்களும், வெட்டுக் காயங்களும், தீக்காயங்களும் இருந்துள்ளன. அவர்களைப் பிடித்து வைத்து சித்திரவதை செய்து சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 40 பேரை, கட்டுமானப் பணிக்காகவும், குவாரி பணிக்காகவும் புரோக்கர்கள் ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களில் 20 பேரை கொன்றுள்ளனர். எஞ்சிய 40 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

அப்பாவி தமிழக கூலித் தொழிலாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாகவும், செம்மரம் கடத்தல் தொடர்பாகவும் மத்திய அரசும், தமிழகம் மற்றும் ஆந்திரா மாநில அரசுகளும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

மேலும், இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க ஆந்திரா அரசுக்கும், கூலித் தொழிலாளர்கள் 40 பேரை கண்டுபிடித்து ஆஜர்படுத்தவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு முக்கியமானது. எனவே, இந்த மனு மீதான விசாரணை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படுகிறது என உத்தரவிட்டார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x