Published : 31 Mar 2015 09:34 AM
Last Updated : 31 Mar 2015 09:34 AM

புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 34 பேரிடம் ரூ.42 கோடி கருப்பு பணம்: வருமான வரி ஆணையர் தகவல்

புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வருமான வரித் துறை நடத்திய கருப்புப் பணம் தொடர்பான ஆய்வில் 34 பேரிடம் ரூ.42 கோடி அளவுக்கு கருப்பு பணம் இருப்பது கண்டறியப் பட்டுள்ளதாக வருமான வரி ஆணையர் மிஸ்ரா தெரிவித்தார்.

வருமான வரித்துறை சார்பில் புதுச்சேரியில் வருமான வரி சேவை மையம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதை தலைமை வருமான வரி ஆணையர் கே.கே.மிஸ்ரா தொடங்கி வைத்து பேசியதாவது:

சென்னை, புதுச்சேரி அடங்கிய மண்டலத்தில் நடப்பாண்டு ரூ.2720 கோடி வரி வசூல் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மொத்த வரி வசூல் இலக்கு ரூ.362 கோடி யாகும். இரண்டு நாட்களில் இந்த இலக்கை அடைந்து விடுவோம்.

மத்திய அரசு உத்தரவின்படி நாடு முழுவதும் 190 வருமான வரிசேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வருமான வரி சேவை மையம் (ASK) தொடங்க அரசு உத்தர விட்டுள்ளது. மனுக்கள் அளித்தால் தீர்வு கிடைக்க பல நாட்கள் ஆகிறது என புகார்கள் வந்தன.

மனுக்கள் எந்த நிலையில் உள்ளன என்பதையும் மனுதாரர் அறியலாம். இங்கு ஒற்றை சாளர முறையில் வருமான வரி செலுத்துவோரிடம் இருந்து குறைதீர் மனுக்கள், புகார்கள் பெறப்பட்டு ஆன்லைன் முறையிலேயே தீர்வு காணலாம்.

புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வருமான வரித்துறை நடத்திய கருப்பு பணம் தொடர்பான ஆய்வில் 34 பேரிடம் மொத்தம் ரூ.42 கோடி அளவுக்கு கருப்பு பணம் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதில் ரூ.12 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதித் தொகையும் விரைவில் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x