Last Updated : 16 Mar, 2015 11:00 AM

 

Published : 16 Mar 2015 11:00 AM
Last Updated : 16 Mar 2015 11:00 AM

மருத்துவத்துக்கு சவாலாக விளங்கும் நோய்கள்

இன்று - மார்ச் 16: தேசிய தடுப்பூசி தினம்

இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் போன்று மக்களை அச்சுறுத்தி வரும் விநோத நோய்கள் தடுப்பு மருத்துவத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளன.

தடுப்பூசியின் வரலாறு போற்றத்தக்கது. தடுப்பூசி தத்துவத்தை முதலில் அறிந்தவர் லூயிஸ் பாஸ்டர்(1822-1895). இவர் கோழிக்கான காலரா மற்றும் வெறிநாய் கடிக்கான தடுப்பூசியை முதலில் கண்டறிந்தார். இதனால் லூயிஸ் பாஸ்டர் நுண்ணுயிரியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

தடுப்பூசியின் அடிப்படையை முற்றிலும் அறிந்து உலகுக்கு விளக்கியவர் ஜென்னர்(1749-1823). ஸ்மால் ஃபாக்ஸ் வேக்சின் எனப்படும் பெரியம்மை தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். இதனால் இவர் தடுப்பூசி வரலாற்றின் தந்தை என அழைக் கப்படுகிறார்.

இவர் கண்டுபிடித்த தடுப்பூசியை உலகெங்கும் பயன்படுத்தி பெரியம்மை நோய் அறவே ஒழிக்கப்பட்டது. 1977-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதிக்கு பின்னர் பெரியம்மை நோய் உலகில் எங்கும் ஏற்படவில்லை.

பிறந்தது முதல்…

தடுப்பூசிகளின் அவசியம் குறித்து கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி நுண்ணுயிரியல் துறைத் தலைவர் ஞானகுரு கூறும்போது, ‘அரசால் அமைக் கப்பட்ட தடுப்பூசி அட்டவணைப்படி போலியோ தடுப்பு மருந்து குழந்தை பிறந்தவுடன் கொடுக்கப்படுகிறது. பின்னர் 45 நாள்களில், 75 நாள்களில், 105 நாள்களில் கொடுக்கப்படுகிறது. 5 வயது வரை குழந்தைகளுக்கு கொடுப்பதால் நல்ல பலனை தருகிறது.

குழந்தைகளுக்கு பிசிஜி எனப்படும் தடுப்பூசி காச நோயையும், போலியோ தடுப்பு மருந்து இளம்பிள்ளை வாதத் தையும், டிபிடி தடுப்பூசியானது கக்குவான், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி ஆகியவற்றையும், மீசல்ஸ் எனப்படும் மருந்து தட்டம்மை நோயையும் தடுக்கிறது.

கல்லீரல் புற்றுநோய்

இதைத்தவிர மஞ்சள்காமாலை தடுப்பூசியை 3 தவணையாக போட வேண்டும். பிறந்தவுடன் முதல் தவணையும், 30 நாள்கள் கழித்து 2-வது தவணையும், 6 மாதங்கள் கழித்து 3-வது தவணையும் போட்டுக்கொள்ள வேண்டும்.

எம்எம்ஆர் தடுப்பூசி என்பது தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை மற்றும் அம்மைக்கட்டு நோயை தடுக்க உதவும். இதனை குழந்தை களுக்கு ஒன்றேகால் வயதில் போடவேண்டும். மஞ்சள் காமாலை தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்வது அவசியம். இந்நோயால் பாதிக்கும்போது கல்லீரல் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.

பிறந்தவுடன் தாக்கக்கூடியது

இன்றைய கால சூழ்நிலைக்கேற்ப தடுப்பூசிகள் ஏராளமாக வந்துள்ளன. உலகையே அச்சுறுத்தும் பன்றிக்காய்ச்சல் போன்ற வைரஸால் வரக்கூடிய உயிர்கொல்லி நோய்கள் தடுப்பு மருந்துகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளன. இதைத் தவிர்க்க தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் அவசியம். தடுப்பூசிகளில் ஊசி மூலம் செலுத்தக்கூடியது, நாசித்து வாரம் வழியாக செலுத்தக்கூடியது என இருமுறைகள் உண்டு.

இதைப்போல் ஹீமோபைலஸ் வைரஸ் என்பது ஒருவகையான பாக்டீரியா. இது பிறந்தவுடன் தாக்கக்கூடிய மோசமான நோய். இதனால் உயிரிழப்பு ஏற்படலாம். இதற்கு இரண்டு தவணைகளாக 3 மாதம், 15-வது மாதம் தடுப்பூசி போட வேண்டும். நோய்களை இனம்கண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வு அனைவரிடமும் வளரவேண்டும்’ என்றார் அவர்.

நோய்களும் தடுப்பூசியும்!

மஞ்சள் காமாலையை பொறுத்தவரை உணவகங்களில் சாப்பிடுவோருக்கு அதிகமாக வர வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க இரு தவணைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். காலராவானது உணவு, நீர் மூலம் பரவக்கூடியது. வயிற்றுப்போக்குடன் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். காலரா தடுப்பூசியை இரு தவணைகளில் போடவேண்டும். டைபாய்டு உணவு, நீர் வழியாக பரவக்கூடியது. இதனைத் தவிர்க்க ஊசி மூலமும், மாத்திரையாகவும் தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x