Published : 16 Mar 2015 09:25 AM
Last Updated : 16 Mar 2015 09:25 AM

வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி பல லட்சம் மோசடி: பெண் உட்பட 4 பேர் கைது

வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி பல லட்சம் மோசடி செய்த பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், "திருவொற்றியூர் டி.எச். சாலையில் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வரும் யுவராணி(26), அவரது கணவர் ராமச்சந்திரன்(35), அலுவலக நிர்வாகிகள் கனியன்(26), ஏழுமலை(26) ஆகியோர் எனது மகனுக்கு தனியார் விமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.50 லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்" என்றும் கூறியிருந்தார்.

புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தியதில், கார் நிறுவனங்கள் உட்பட பல தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.15 ஆயிரம் முதல் பலரிடம் வசூல் செய்திருப்பது தெரிந்தது. வாங்கிய பணத்துக்கு ரூ.20 மதிப்புள்ள பத்திரத்தில் 45 நாட்களுக்குள் வேலை வாங்கித் தருவதாகவும், இல்லாவிட்டால் பணத்தை திரும்ப கொடுத்துவிடுவதாகவும் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர். இதை நம்பி பலர் பணம் கட்டியுள்ளனர்.

ஆனால் கூறியபடி வேலை வாங்கி கொடுக்காததால் பலர் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுக்க, பணமில்லாத வங்கி காசோலைகளை கொடுத்தும் ஏமாற்றியுள்ளனர். சூளைமேட்டில் இதேபோல ஒரு அலுவலகத்தை நடத்தி மோசடி செய்து மூடிவிட்டு, பின்னர் திருவொற்றியூரில் தொடங்கி மோசடி செய்துள்ளனர். இந்த தகவல்கள் அனைத்தும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து யுவராணி, அவரது கணவர் ராமச்சந்திரன், அலுவலக நிர்வாகிகள் கனியன், ஏழுமலை ஆகிய 4 பேரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x