Published : 04 Feb 2015 09:24 AM
Last Updated : 04 Feb 2015 09:24 AM
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி அருகே வீட்டில் இருந்த தாய், மகள் வெட்டிக் கொல்லப் பட்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.
கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள சின்ன சோழியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி லட்சுமி (50). இவர்களது மகள்கள் அம்பிகா (26), நிரோஷா (24), மகன் யுவராஜ் (22). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராஜேந்திரன் காலமானதையடுத்து, தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார் லட்சுமி. அம்பிகா, திருமண மாகி மாதர்பாக்கம் அருகேயுள்ள அமிர்தமங்கலம் கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.
2012, ஆகஸ்டில் கிரிக்கெட் விளையாட்டின்போது நேரிட்ட மோதலில் யுவராஜ் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சின்னசோழியம்பாக்கத்தைச் சேர்ந்த தங்கராஜ் (27), சண்முகம் (26), ராமமூர்த்தி (21), ராமுலு (21) மற்றும் முருகன், ராமச்சந்திரன், மணி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு, 7 பேரும் நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தனர்.
இவர்களில் தங்கராஜ், சண்முகம், ராமமூர்த்தி, ஸ்ரீராமுலு ஆகிய 4 பேரும் செங்குன்றம் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டதாக சென்னை மாநகர போலீஸாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று காலை தெருக் குழாயில் லட்சுமி, நிரோஷா ஆகியோர் தண்ணீர் பிடிக்க வராததால், அக்கம்பக்கத்தினர் அவர்களது வீட்டுக்குச் சென்றுபார்த்தபோது, இருவரும் வீட்டுக்குள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரிய வந்தது.
தகவலறிந்து திருவள்ளூர் எஸ்பி சாம்சன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். முதற்கட்ட விசாரணையில், லட்சுமியின் மகன் யுவராஜ் கொலை வழக்கில் தொடர்புடையவர்களில், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலிருக்கும் 4 பேரைத் தவிர முருகன், ராமச்சந்திரன், மணி ஆகிய 3 பேரும் தலைமறைவாகியுள்ளது தெரிய வந்தது.
எனவே, யுவராஜ் கொலை வழக்கின் முக்கிய சாட்சிகளான லட்சுமியையும், நிரோஷாவையும், யுவராஜ் கொலையில் தொடர்புடையவர்கள் கொலை செய்திருக்கலாம் என்பது உட்பட பல்வேறு கோணங்களில் தனிப் படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலை தொடர்பாக கும்மிடிப்பூண்டி போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT