Published : 18 Feb 2015 10:31 AM
Last Updated : 18 Feb 2015 10:31 AM

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் பதிவு: ஏற்காடு சாதனையை விஞ்சியது

தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல்களில் அதிக வாக்குகள் பதிவான ஏற்காடு தொகுதியின் சாதனையை ஸ்ரீரங்கம் முறியடித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் திருச்சி மேற்கு, சங்கரன்கோவில், புதுக்கோட்டை, ஆலந்தூர், ஏற்காடு ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. தற்போது 6-வதாக ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதியில் இடைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

2011 அக்டோபர் மாதம் திருச்சி மேற்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 1.27 லட்சம் வாக்காளர்களும், சங்கரன்கோவில் தொகுதியில் 2012 மார்ச் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் 1.6 லட்சம் வாக்காளர்களும், 2012 ஜூன் மாதம் நடைபெற்ற புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் 1.43 லட்சம் வாக்காளர்களும், 2013 டிசம்பர் மாதம் ஏற்காடு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 2.14 லட்சம் வாக்காளர்களும், ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகு திக்கு 2014 ஏப்ரலில் நடை பெற்ற இடைத்தேர்தலில் 2.01 லட்சம் வாக்காளர்களும் வாக்களித் திருந்தனர்.

இதில் அதிகபட்சமாக ஏற்காடு தொகுதியில் 2,14,406 வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குப்பதிவு சதவீதம் 89.2 ஆகும்.

இடைத்தேர்தல் வரலாற்றில் அதிக வாக்காளர்கள் வாக்களித்த சாதனையைக் கொண்டிருந்த ஏற்காடு தொகுதியை தற்போது நடைபெற்று முடிந்த ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் முறியடித்துள்ளது.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 2,21,172 வாக்காளர்கள் வாக்களித் துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 81.83 ஆகும்.

ஏற்காட்டைவிட ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவு என்றாலும் பதிவான வாக்குகள் அடிப்படையில் பார்க்கும்போது ஸ்ரீரங்கம் முந்தி நிற்கிறது.

இதற்கு காரணம் இந்த தொகுதியின் உறுப்பினராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெய லலிதாவின் தொகுதியாக ஸ்ரீரங்கம் இருந்ததுதான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x