Published : 11 Apr 2014 12:55 PM
Last Updated : 11 Apr 2014 12:55 PM

வருமான வரி வழக்கு: ஏப்.28-ல் ஜெயலலிதா தவறாமல் ஆஜராக வேண்டும் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் வியாழக்கிழமை ஆஜராகவில்லை. அவர்கள் இருவரும் வரும் ஏப்ரல் 28-ம் தேதி தவறாமல் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991 – 92 மற்றும் 1992 – 93 ஆகிய நிதியாண்டுகளில் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று கூறி அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறையினர் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஜெய லலிதா, சசிகலா ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். கடந்த ஜனவரி மாதத்தில் அந்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், வருமான வரி கணக்கு தொடர்பான இந்த வழக்கின் விசாரணையை 4 மாத காலத்துக்குள் சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றங்கள் தொடர்பான வழக்கு களை விசாரிக்கும் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஆர். தட்சிணாமூர்த்தி முன்னிலையில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா, சசிகலா இருவரும் ஏப்ரல் 3-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். எனினும் 3-ம் தேதி அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை.

வழக்கின் விசாரணையில் தான் நேரில் ஆஜராக விலக்கு அளித்து, தன் சார்பில் தனது வழக்கறிஞர் ஆஜராகி பதிலளிக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஜெயலலிதா சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் ஏப்ரல் 10-ம் தேதி ஆஜராக வேண்டும் என் றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விசாரணையை 4 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி முன்னிலையில் இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வர் ஜெய லலிதா மற்றும் சசிகலா ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ள மனுக்கள் நிலுவையில் இருப்பதால், வழக்கின் விசாரணையை 3 வார காலத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தனர்.

இந்த மனுவை ஏற்கக் கூடாது என வருமான வரித் துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை 2 வார காலத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மீண்டும் இந்த வழக்கு ஏப்ரல் 28-ம் தேதி விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், அன்றைய தினம் ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் தவறாமல் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x