Published : 09 Feb 2015 10:46 AM
Last Updated : 09 Feb 2015 10:46 AM

மீத்தேன் திட்டத்தால் டெல்டா பகுதியில் 20 லட்சம் ஏக்கர் விவசாயம் அழியும்: சமூக சேவகர் மேதா பட்கர் எச்சரிக்கை

மீத்தேன் எடுப்பு திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு அடையும் என சமூக சேவகர் மேதா பட்கர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து சிதம்பரத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீத்தேன் எடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும், குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளை காலி செய்யும் நிலை ஏற்படும். காவிரி டெல்டா பகுதியில் சுமார் 20 லட்சம் ஏக்கர் விவசாயம் அழியும் நிலை ஏற்படும். இதனால் இந்த பகுதி மக்கள் பெரும் பாதிப்பு அடைவார்கள்.

பூமியில் 2 ஆயிரம் அடி துளை போட்டு ரசாயனத்தை செலுத்தி பாறைகளை வெடிக்க வைத்து மீத்தேன் எடுக்கப்படும். இதனால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பு அடையும். எனவேதான் மேற்கத்திய நாடுகள் இத்திட்டத்தை நிறுத்திவிட்டன.

வளர்ச்சி என்று கூறி மத்திய அரசு இத்திட்டத்தை பற்றி மக்களிடம் கருத்து கேட்காமல் செயல்படுத்துகிறது. இத்திட்டம் பற்றி விவரங்கள், ஆய்வுகள் அனைத்தையும் தமிழில் மொழி மாற்றம் செய்து, கிராம சபைகளில் மக்கள் தெரிந்து கொள்ளுமாறு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழக அரசு மக்கள் நலன் கருதி மீத்தேன் எரிவாயு திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். நிலத்தை கையகப்படுத்தும் அவரச சட்டத்தின் மீது பொது விசாரணை நடத்த வேண்டும். நதிநீர் பங்கீட்டில் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

பின்னர் சீர்காழி அருகேயுள்ள பழையபாளையம், திருநகரி ஆகிய கிராமங்களில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுடன் மேதா பட்கர் ஆய்வு மேற்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x