Published : 14 Jan 2015 01:36 PM
Last Updated : 14 Jan 2015 01:36 PM

அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அவசர சட்டம் நிறைவேறினால் வேலைநிறுத்தம்: காப்பீடு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அவசர சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் தென் மண்டல பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன் தலைமை வகித்தார். சென்னை 1-வது மண்டல பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சங்கத்தின் தேசிய தலைவர் அமனுல்லாகான் பேசியதாவது:

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அதை கண்டித்து காப்பீட்டுத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

நான்கு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றை பங்குச் சந்தையில் பட்டியலிட்டு தனியார்மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேலும், காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது, காப்பீடுதாரர்களையும் பாதிக்கும். எங்களுக்கு ஊதியத்தை 40 சதவீதம் அதிகரித்து வழங்கும்படி மத்திய அரசிடம் கடந்த 2002-ம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வருகிறோம். மத்திய அரசு இதுதொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாமல் அலட்சியத்துடன் செயல்படுகிறது.

இவ்வாறு அமனுல்லாகான் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x