Published : 21 Jan 2015 12:31 PM
Last Updated : 21 Jan 2015 12:31 PM
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது யார் என்பது தொடர்பாக பாஜக மற்றும் தேமுதிக இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. ஓரிரு நாளில் இறுதி முடிவை விஜயகாந்த் அறிவிக்கிறார்.
தமிழகத்தில் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.
இந்தத் தேர்தலில் போட்டியிட பாஜக ஆர்வமாக உள்ளது. ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறி விட்டது. பாமகவோ போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என அறிவித்துள்ளது. இதனால், தேமுதிக ஆதரவை பெற பாஜக தீவிர முயற்சி எடுத்துவருகிறது. அதே நேரத்தில் தேமுதிகவும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அமைப்பு பொதுசெயலாளர் மோகன்ராஜூலு உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று காலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தை சந்தித்துப் பேசினர். அப்போது பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
அதற்கு விஜயகாந்த், கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து ஓரிரு நாளில் முடிவு தெரிவிக்கப்படும் என கூறி யுள்ளார்.
இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, ‘‘ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக விஜயகாந்தை சந்தித்துப் பேசினோம்.
பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் யார் வேட்பாளர் என்பது பற்றி மீண்டும் பேச்சு நடத்தி ஓரிரு நாளில் அறிவிப்போம். தேர்தலில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உண்டு.
அதன்படி, ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுவது இல்லை என்ற நிலைப்பாட்டை பாமக எடுத்துள்ளது. பாமக தலைவர்களை விரைவில் சந்தித்துப் பேசி ஆதரவைப் பெற முயற்சிப்போம்’’ என்றார்.
தேமுதிக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘ஸ்ரீரங்கத்தில் போட்டியிட எங்கள் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர். கட்சியின் இறுதி முடிவை ஓரிரு நாளில் விஜயகாந்த் அறிவிப்பார்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT