

சென்னை: வருவாய் நிர்வாக ஆணையர் முருகானந்தம், பள்ளிக்கல்வித்துறை செயலர் சந்திரமோகன் உட்பட 27 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த உத்தரவை தலைமைச்செயலர் சாய்குமார் வெளியிட்டுள்ளார். அதன்படி, டான்சி தலைவராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ், ஊரக வளர்ச்சித்துறை செயலராகவும், பள்ளிக்கல்வித்துறை செயலர் பி.சந்திரமோகன் வருவாய் நிர்வாக ஆணையராகவும், அப்பதவியில் இருந்த நா.முருகானந்தம் டான்சி தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநராக இருந்த ஜெ.இன்னசன்ட் திவ்யா, பள்ளிக்கல்வி செயலராக நியமி்க்கப்பட்டுள்ளளார்.
இதுதவிர பெரம்பலூர் ஆட்சியர் ஷரண்யா அரி விருதுநகர் ஆட்சியராகவும், பொன்னேரி சரக சார் ஆட்சியர் எப்.அப்துல் ரஷிக், பெரம்பலூர் ஆட்சியராகவும், செங்கல்பட்டு சரக சார் ஆட்சியர் வி.நல்ல சிவம், திருப்பூர் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எம்டிசி மேலாண் இயக்குநராக இருந்த டி.மோகன், உள்துறை கூடுதல் செயலராகவும், சுற்றுலாத்துறை இயக்குநர் வி.பி.ஜெயசீலன் எம்டிசி மேலாண் இயக்குநராகவும், டாமின் மேலாண் இயக்குநர் சரவண வேல்ராஜ், எழுதுபொருள் அச்சகத்துறை ஆணையராகவும், ஆவின் மேலாண் இயக்குநர் அஜய்யாதவ், உணவுப்பொருள் வழங்கல் ஆணையராகவும், உணவுப்பொருள் வழங்கல் இயக்குநராக இருந்த சிவராசு, ஆவின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கைத்தறித்துறை செயலர் டி.என்.வெங்கடேஷ், டுபிட்கோ மேலாண் இயக்குநராகவும், தாட்கோ மேலாண் இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி, டாமின் மேலாண் இயக்குநராகவும், டுபிட்கோ மேலாண் இயக்குநர் கவிதா ராமு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட 27 ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் மாற்றப்பட்டுள்ளனர்.