Published : 06 Dec 2014 08:33 AM
Last Updated : 06 Dec 2014 08:33 AM

கச்சத் தீவை மீட்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு வலியுறுத்தல்- தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியது

பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமையை பெறும் வகையில் கச்சத் தீவை மீட்க மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:

ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 5 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரும் போதைப் பொருள் கடத்தியதாக புனையப்பட்ட வழக்கு ஒன்றை அவர்கள் மீது இலங்கை அரசு தொடர்ந்தது. இந்த வழக்குகளிலிருந்து அவர்கள் விடுதலை பெறுவதற்கு ராமேசுவரத்திலுள்ள ‘நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பு’ மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப் பட்டது. இந்த 5 மீனவர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.7,500 வழங்கப்பட்டது.

மேலும், 5 அப்பாவி மீனவர் களுக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக வரையறுக்கப்பட்ட காலத் திற்குள் இலங்கையின் மேல்முறை யீட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திட உரிய நடவடிக்கை எடுக்கவும், ராஜ்ஜிய நடவடிக்கைகள் மூலம் அவர்கள் விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், ஒட்டு மொத்த தமிழ கமுமே இந்த கோரிக்கையை வைத்தன. மத்திய அரசு மேற் கொண்ட ராஜ்ஜிய நடவடிக்கைகள் காரணமாக இந்த 5 மீனவர்கள் கடந்த நவம்பர் மாதம் 19-ம் தேதி விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பினார்கள்.

5 மீனவர்களின் வழக்குச் செலவுக்காகவும், அவர்கள் சிறையில் இருந்தபோது அவர் களது குடும்பத்தினரின் வாழ்வாதா ரத்திற்காகவும், மீனவர்கள் இந்தியா திரும்பியதும், புதுவாழ்வு தொடங்குவதற்கு எனவும் மொத்தம் ரூ.63.85 லட்சம் வழங்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தமிழக அரசுக்கும் இந்த பேரவை பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

கடல் எல்லையைக் கடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கும் 38 மீனவர்களை உடனே விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு அவர்கள் வசம் உள்ள 79 மீன்பிடிப் படகுகளை விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழக மீனவர்கள் எவ்வித இன்னலுமின்றி தங்களுடைய வாழ்வாதாரத்தை மேற்கொள்ள ஏதுவாக கச்சத் தீவை திரும்பப் பெறவும், பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமையை இலங்கை அரசு தடுக்காமல் இருப்பதற்கும், தேவை யான அனைத்து நடவடிக்கை களையும் மத்திய அரசு எடுக்க வேண்டுமென தமிழக சட்டப் பேரவை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), கதிரவன் (பார்வர்டு பிளாக்) டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஜவாஹிருல்லா (மமக), கணேஷ்குமார் (பாமக), கலையரசு (பாமக அதிருப்தி எம்எல்ஏ) விஜயதாரணி (காங்கிரஸ்), குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்), கு.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகியோர் ஆதரவு தெரிவித்து, வரவேற்று பேசினர்.

திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்

சட்டப்பேரவையில் மின்கொள் முதல் தொடர்பாக திமுக, அதிமுக இடையே ஏற்பட்ட காரசார விவாதத்தைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக சட்டமன்றக் குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x