Published : 05 Jul 2019 05:15 PM
Last Updated : 05 Jul 2019 05:15 PM
பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை உயர்த்தும்போது, நுகர்வோர்கள் வாங்கும் பாலின் விலையையும் உயர்த்தவேண்டிய நிலை ஏற்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி பேசும்போது, ''பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை நீண்ட ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது. அவர்களுக்கு விலையை உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தினால், நுகர்வோருக்கும் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். பால் விலையை உயர்த்த திமுகவுக்கு சம்மதமா?'' என்று கேள்வி எழுப்பினார்.
''பால் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. விலை உயர்த்த நீங்கள் சம்மதம் தெரிவித்தால் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவதற்குள் உயர்த்துவோம். அப்போதுதான் கொள்முதல் சங்கங்கள் நட்டத்துக்குச் செல்லாமல் இயங்கும்'' என்றார் பழனிசாமி.
ஒருவேளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவதற்குள் பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை உயர்த்தும்போது, பால் விலையும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT