Published : 17 Nov 2014 09:44 AM
Last Updated : 17 Nov 2014 09:44 AM
தமிழக அரசை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பின்னிருந்து இயக்குகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்ட இரண்டு நாள் மாநாடு விருகம் பாகத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து ஜி.ராம கிருஷ்ணன் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ‘பேக் சீட் ட்ரைவிங்’ செய்வது போல், தமிழக அரசை பின்னிருந்து இயக்குகிறார். அது வெகு நாட்கள் நீடிக்காது. அதிமுக ஆட்சிக்கு வந்தால், மணல் கொள்ளை தடுக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால், இன்னமும் மணல் கொள்ளையும், கடலோர மாவட்டங்களில் தாது மணல் கொள்ளையும் நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றுள்ள காலத்தில் கார்பரேட் கம்பெனிகளுக்குத்தான் சலுகைகள் அளித்து வருகிறார். 2013-ம் ஆண்டு 10 கார்பரேட் கம்பெனிகளின் சொத்து ரூ.6,75,350 கோடியாக இருந்தது 2014-ம் ஆண்டில் ரூ.8,90,590 கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.
இந்த மாநாட்டில் தென் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.நந்தகோபால் கட்சி கொடியை ஏற்றினார். மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. வாழ்த்துரை வழங்குகிறார். திங்கள்கிழமை மாலை எம்.ஜி.ஆர். நகரில் பேரணியும் பொதுக்கூட்டமும் நடக்க உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT