Published : 08 Jul 2019 01:25 PM
Last Updated : 08 Jul 2019 01:25 PM
வேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற சூழ்நிலையில், வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கதிர் ஆனந்த் வீட்டில் மார்ச் 29, 30 தேதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. அதற்கு இரண்டு நாள் கழித்து ஏப்ரல் 1 மற்றும் 2-ம் தேதி துரைமுருகனின் நெருங்கிய உறவினரும் திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி வீடு, சிமெண்ட் குடோனில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.11 கோடியே 48 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் முன்பு அறிவித்தபடி, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என அதிமுக அறிவித்துள்ளது. திமுக வேட்பாளராக மீண்டும் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.
இந்த சூழலில் வேலூர் தொகுதியில் அமமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அமமுக சீர்குலைந்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இப்போதுதான் கட்சியைப் பதிவுசெய்யும் பணியில் உள்ளோம். இந்தப் பணி முடிவடையவில்லை. இன்னும் சில இடைத்தேர்தல்கள் வர உள்ளன. அதனால் தனித்தனி சின்னங்களில் சுயேச்சையாக நிற்க வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகள் கலந்து பேசி முடிவெடுத்துள்ளோம்.
அமமுகவைப் பதிவு செய்து, முறையான சின்னம் கிடைத்த பிறகு தேர்தல்களில் போட்டியிட முடிவுசெய்துள்ளோம். இதனால் வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை'' என்றார் தினகரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT